“2 தொகுதிகளில் ஒருவர் நிற்பது தோல்வியின் அடையாளம்" திருச்சி கிழக்கில் விஜய்யை விமர்சித்த கமல்ஹாசன்
திருச்சி: "2 தொகுதிகளில் ஒருவர் நிற்பது தோல்வியின் அடையாளம்" திருச்சி கிழக்கு தொகுதி திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரம் செய்துள்ளார். உண்மையான தலைவன் என்பது மக்களுக்கு ஆபத்து வரும்போது ஓடி வரவேண்டும் ஓடிவிடக்கூடாது என விஜய்யை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் வரும் 23 ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் களத்தில் அனல் பறந்து வருகிறது. இந்த தேர்தலில் புதிதாக களமிறங்கும் விஜய்யின் தவெக தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. தவெக தலைவர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

திருச்சி கிழக்கு சட்டசபை தொகுதியில் 20 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். திருச்சி கிழக்கு சட்டசபை தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவா் சி. ஜோசப் விஜய், திமுக சாா்பில் இனிகோ இருதயராஜ், அதிமுக சாா்பில் க. ராஜசேகரன், நாம் தமிழா் கட்சியின் சாா்பில் மருத்துவா் வி. கிருஷ்ணசாமி, புதிய தமிழகம் கட்சியின் என். கோபிநாத் உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில், நேற்று திருச்சி கிழக்கு தொகுதியில் ரோடு ஷோ நடத்தினார் விஜய். ரோடு ஷோவின்போது வயர்லெஸ் சாலையில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்திற்கு சென்ற விஜய் அங்கு மண்டியிட்டு நகர்ந்து சென்று பிரார்த்தனை செய்தார். அதேபோல கேகே நகர் பகுதியில் உள்ள பள்ளிவாசலுக்கு சென்று பள்ளிவாசலில் உள்ள நிர்வாகிகளை சந்தித்தார். அங்கு தொழுகை செய்தார். பின்னர் கொட்டப்பட்டில் உள்ள பச்ச நாச்சியம்மன் கோவிலுக்கு சென்று அங்கும் வழிபாடு செய்தார். பச்ச நாச்சி அம்மன் கோவிலிலுக்கு சென்று தரிசித்து, நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கி மனமுருகி வேண்டிக்கொண்டார் விஜய்.
இந்நிலையில் திருச்சி கிழக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜுக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று பரப்புரை மேற்கொண்டார். "என்னையும் 2 தொகுதிகளில் நிற்கச் சொன்னார்கள். அது தோல்வியின் ஆரம்பம் என்று நான் கூறினேன். 2 தொகுதிகளில் நிற்பது மக்களுக்கு செய்யும் துரோகம். அதனால் ஒரு இடம் போதும் எனச் சொல்லும் அறிவு எனக்கு இருந்தது.
இங்கு ஒரு கால் அங்கு ஒரு கால் வைத்தால் அந்த தொகுதியை யார் பார்த்துக்கொள்வது? இதற்கு முன்பு யாரோ ஒரு பெரிய தலைவர் வடக்கில் செய்திருக்கிறார் என்றால் அவருக்கும் சேர்த்துத்தான் சொல்கிறேன். திருச்சி கிழக்கில் இனிகோ இருதயராஜ் தான் பதில் சொல்லவேண்டும்" எனப் பேசியுள்ளார்.
மேலும், "திமுகவை ஒழிப்பேன் என்று வரும் வசனங்கள் எல்லாம் மேலிருக்கும் முதலாளிகள் சொல்வதை கேட்டு பேசுகிறார்கள். இது போன்ற டயலாக் சினிமாவில் பேசலாம். ஆனால் வாழ்க்கையில் மக்களை வைத்துக்கொண்டு அந்த விளையாட்டை விளையாட முடியாது" என விஜய்க்கு கமல்ஹாசன் அறிவுரை வழங்கியுள்ளார்.
மேலும் பேசிய அவர், "சினிமா பளபளப்பில் தொண்டர்கள் கிடைத்துவிடுவார்கள். ரசிகர்கள் கிடைத்துவிடுவார்கள். அவர்களை டிக்கெட் வாங்க மட்டும் வைத்தால் அது ஒரு துரோகம் என எனக்குத் தோன்றியது. உண்மையான தலைவன் என்பது மக்களுக்கு ஆபத்து வரும்போது ஓடி வரவேண்டும் ஓடிவிடக்கூடாது." என விஜய்யை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications