வேர்களைத் தேடிப் பயணம்! துரை வைகோவிடம் கண் கலங்கிய மறைந்த மதிமுக நிர்வாகிகள் குடும்பத்தினர்!
திருச்சி: மதிமுகவுக்காகவும், வைகோவுக்காகவும் உயிர்நீத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் குடும்பத்தினரை சந்திக்க ஆரம்பித்துள்ளார் அக்கட்சியின் தலைமைக் கழகச் செயலாளர் துரைவைகோ.
வேர்களைத் தேடிப் பயணம் என்ற பெயரில் அவர் முன்னெடுத்துள்ள இந்த பயணத்திற்கு அவரது கட்சியினர் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.
வைகோவுக்காக உயிர்நீத்தவர்களின் குடும்பங்கள் பெரியளவில் யாரது ஆதரவும் இல்லாமல் நிர்கதியாக இருந்து வருவது துரை வைகோவின் முகநூல் பதிவின் மூலம் தெரிய வருகிறது.
இது தொடர்பாக துரைவைகோ விடுத்துள்ள பதிவின் விவரம்'
திராவிட மாடல் ஆட்சியின் சாதனையில் இன்னொரு 'மைல்கல்’.. ஸ்டாலினை மனம் திறந்து பாராட்டிய வைகோ!
வேர்களை தேடி
இயக்கத்திற்காகவும், தலைவர் வைகோ அவர்களுக்காகவும் தீ குளித்து தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொண்ட, தியாகிகளின் குடும்பங்களை நேரில் சென்று சந்திக்கத் திட்டமிட்டு இருந்தேன். அதன்படி, உப்பிலியாபுரம் அருகில் உள்ள நாகநல்லூர் கிராமத்தில் வசிக்கும் உப்பிலியாபுரம் வீரப்பன் அவர்களின் குடும்பத்தினரை நேரில் சென்று சந்தித்தேன். வீரப்பன் அவர்களின் உயிர்த் தியாகத்தை நினைவுகூர்ந்து அவர்களின் நலனை கேட்டு அறிந்தேன்.
உங்கள் மகன் நான்
குடும்ப அட்டை கிடைப்பதற்கு உரிய ஏற்பாடுகள் செய்து தருவதாகவும், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வேன் எனவும் அவர்களிடம் உறுதியளித்தேன். அந்த அம்மாவிடம், இனிமேல் நீங்கள் கவலைப்படாதீர்கள். என்னையும் உங்கள் மகனாக நினைத்துக் கொள்ளுங்கள். உங்கள் குடும்பத்திற்கு உறுதுணையாக இருப்பேன் என, ஆறுதல் தெரிவித்து விடைபெற்றேன்.
அந்தநல்லூர் அறிவழகன்
அதைப்போல, மதியம் 1 மணியளவில், தலைவர் வைகோ அவர்கள் பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்ட போது, அதைக் கண்டித்து தீ குளித்து இறந்த அந்தநல்லூர் அறிவழகன் அவர்களின் குடும்பத்தினரை நேரில் சென்று சந்தித்தேன். அவருடைய மனைவி, மகள், மருமகன், பேரன் ஆகியோர் இருந்தார்கள். மூன்று வருடங்களுக்கு முன்னர் விபத்து ஒன்றில் அறிவழகன் அவர்களின் மகன் இறந்து விட்டார்.அந்தக் குடும்பமும் மிகவும் பரிதாபகரமான நிலையில் தான் இருக்கின்றது.
கண் கலங்கினார்
அறிவழகன் அவர்களின் மனைவியிடம் அந்தக் குடும்பத்தின் நிலை குறித்து கேட்டறிந்தேன். தான் முதியோர் உதவித் தொகை பெற்று வந்ததாகவும், தற்போது அது நிறுத்தப்பட்டு விட்டதாகவும் தெரிவித்தார். தன் மகன் வாகன விபத்தில் இறந்த வழக்கு தற்போது நடைபெற்று வருவதாகவும், அந்த வழக்கில் தங்களுக்கு சாதகமான ஒரு நம்பிக்கை இல்லாத சூழல் இருப்பதாகவும் தெரிவித்தார். தன் மகளுக்கு ஏதாவது ஒரு வேலை வாங்கித் தாருங்கள் எனவும் கண் கலங்கினார்.
கவலைப்படாதீர்கள்
எதற்கும் கவலைப்படாதீர்கள் நான் இருக்கிறேன் என்ற நம்பிக்கையை அவர்களிடம் தெரிவித்து விடை பெற்றேன். அரியலூர் மாவட்டத்தில் உள்ள இடிமழை உதயன் அவர்களின் கிராமத்திற்கு இரவு 9 மணியளவில் சென்றேன். அவரது தந்தையை நேரில் சந்தித்து உதயனின் உயிர்த்தியாகத்தை நினைவுகூர்ந்தேன். உதயனுக்கு ஒரு தம்பி இருந்தாலும், அவரது தந்தை பெரிய அளவில் எந்த ஆதரவும் இல்லாமல் தான் தற்போது வசித்து வருகின்றார். உதயனின் தந்தை அவருக்கு சொந்தமான விவசாய நிலத்தை விற்று, தன் வாழ்நாளில் ஒரு வீட்டைக் கட்டிவிட வேண்டும் என்ற முயற்சியில், கட்டுமானப் பணிகளைத் தொடங்கினார். ஆனால், தற்போது பொருளாதார நெருக்கடியால், வீடு முழுமை அடையாத நிலையில் இருக்கின்றது.
நிம்மதியாக உறங்குங்கள்
உங்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டியது என் கடமை. உங்கள் வீட்டு கட்டுமானப் பணிகளுக்கு தேவையான உதவியை கழகத் தோழர்களின் ஒத்துழைப்போடு வழங்கி, உங்கள் ஆசையை உறுதியாக நிறைவேற்றுகிறேன். நான் அடுத்த முறை நான் இங்கே வருவது இந்த வீட்டின் திறப்பு விழாவுக்காக தான் இருக்கும். உங்கள் ஆசைப்படி, தலைவர் வைகோ அவர்களையும் அழைத்து வருகின்றேன். இன்று இரவு வீட்டைக் கட்டி முடிப்பது பற்றிய எந்தக் கவலையும் இல்லாமல் நிம்மதியாக உறங்குங்கள். உங்களுக்கு பக்கபலமாக எப்போதும் நான் இருப்பேன் என, இடிமழை உதயனின் தந்தையிடம் தெரிவித்து விடைபெற்றேன்.
மூன்று தியாகிகள்
நேற்று ஒருநாளில் மட்டும் மூன்று தியாகிகளின் குடும்பங்களை நேரில் சென்று சந்தித்து, அவர்களின் குடும்ப, பொருளாதார, வாழ்க்கைச் சூழலை அறிந்தேன். அவர்களின் வாழ்வு மேம்பட என்னால் ஆன அனைத்து உதவிகளையும் செய்து எப்போதும் உடனிருப்பேன் என, அவர்களிடம் உறுதியளித்தேன். இழந்த உயிரை மீட்டுத்தர இயலாது. ஆனால், அவர்களுக்கு ஏற்பட்டு இருக்கும் காயத்திற்கு மருந்திட முடியும்.
அந்தப் பணியை உறுதியாக செய்வேன். மறுமலர்ச்சி தி.மு.க அந்தக் குடும்பங்களின் தியாகத்தை என்றும் மறவாது.வேர்களைத் தேடிய என் பயணம் தொடரும்..!