ஹஸ்கி வாய்ஸில் பேசினால் சோகமா? விஜய்க்கும் திமுக அரசுக்கும் ரகசிய டீலிங்கா? திருமாவளவன் கேள்வி
திருச்சி: கரூரில் தவெக பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவத்தில் விஜய் மீது வழக்குப் பதிவு செய்யாதது ஏன் என்றும் விஜய்யை கண்டு காவல் துறைக்கு அச்சமா, இல்லை விஜய்க்கும் திமுக அரசுக்கும் ரகசிய டீலிங் இருக்கிறதா என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் ஹஸ்கி வாய்ஸில் வீடியோவில் பேசினால் விஜய் சோக்தில் இருக்கிறார் என்றாகிவிடுமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருச்சியில் திருமாவளவன் எம்பி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், மதுவிலக்கு கொள்கையை வரையறுக்க வேண்டும். அது நடைமுறைக்கு வந்தால்தான் இளம் தலைமுறையை காப்பாற்ற முடியும். அரசியல் கட்சிகள் நடத்தும் மாநாடுகளில் இளைஞர்கள் வந்து கலந்து கொள்கிறார்கள்.

ரகசிய டீலிங்
அவர்களில் கணிசமானோர் போதையில் பங்கேற்பதை நானே கவனித்து இருக்கிறேன். தவெக தலைவர் விஜய் மீது வழக்குப் பதிவு செய்ய தமிழக அரசும் காவல் துறையும் அஞ்சுகிறதா, தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது வழக்குப் பதிவு செய்த காவல் துறை, விஜய் மீது ஏன் வழக்குப் பதிவு செய்யவில்லை என்பதை விளக்க வேண்டும்.
41 பேர் இறப்பு
விஜய்யை பார்க்க போய்தான் 41 பேர் இறந்துள்ளனர். எனவே அவருக்கும் இந்த சம்பவத்திற்கும் தொடர்பில்லை என்றால் புஸ்ஸி ஆனந்த் மீது வழக்கு ஏன்? புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர்தான் இந்த சம்பவத்திற்கு பொறுப்பு என்றால் கட்சி தலைவர் என்ற முறையில் விஜய்க்கும் பொறுப்புதானே!
காவல் துறை செய்வது சரியல்ல
அருண் ராஜுதான் இந்த பரப்புரைகளுக்கு திட்டமிட்டு வகுத்து கொடுத்துள்ளார். அவர் மீது ஏன் வழக்குப் பதிவு செய்யவில்லை. வலுத்தவர் மீது வழக்கு இல்லை. இளைத்தவர் மீது வழக்கு போடுவது என்கிற போக்கை போலீஸ் கையாளுகிறதா? காவல் துறையின் இந்த அணுகுமுறை ஏற்புடையது அல்ல.
விஜய் மீது வழக்குப் பதிவு
விஜய் மீது வழக்குப் பதிவு செய்ய முகாந்திரம் இல்லை என்றால் புஸ்ஸி ஆனந்த் மீது மட்டும் பதிவான வழக்கில் முகாந்திரம் எப்படி இருக்கும்? விஜய் மீது வழக்குப் பதிவு செய்யாததற்கு திமுக- தவெக இடையே மறைமுக டீலிங் உள்ளதா? விஜய் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டாம் என அழுத்தம் கொடுத்தது யார்? ஹஸ்கி வாய்ஸில் பேசினால் சோகம் என நம்பிவிடுவார்கள் என விஜய் வீடியோவில் அவ்வாறு பேசியுள்ளார்.
ஆர்எஸ்எஸ் சொன்னதும் வீடியோ
3 நாட்கள் சும்மா இருந்து விட்டு ஆர்எஸ்எஸ் தலைமை சொன்னதும் வீடியோ வெளியிடுகிறார். ஆர்எஸ்எஸ் அமைப்பின் பின்னணியில் இயங்கும் விஜய்யின் அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது. விஜய்யை சுற்றியிருக்கும் அனைவரும் பாஜக பயிற்சி பட்டறையில் பயிற்சி பெற்றவர்கள்.
பாஜக= அதிமுக கூட்டணியில் விஜய்
திமுக கூட்டணிக்கான சிறுபான்மையினரின் வாக்குகளை விஜய் மூலம் பிரிப்பதே பாஜகவின் திட்டம். பாஜக- அதிமுக கூட்டணியில் கண்டிப்பாக விஜய்யை சேர்த்துக் கொள்ளமாட்டார்கள். கரூர் துயர சம்பவத்தில் விஜய்யை காப்பாற்ற பாஜக முயற்சி செய்கிறது. விஜய் சுதந்திரமாக அரசியலுக்கு வரவில்லை, முழுக்க முழுக்க பாஜக தூண்டுதலே காரணம்.
ஆபத்தான் அரசியல்
விஜய் ஆபத்தான அரசியலை கையில் எடுத்திருக்கிறார். வெறுப்பு அரசியலை பேசி வரும் விஜய்யால் தமிழகத்தில் ஒரு போதும் ஆட்சியைப் பிடிக்க முடியாது. குற்றவுணர்வே இல்லாமல் ஆட்சியாளர்கள் மீது விஜய் பழி போட முயற்சிக்கிறார் என்றும் திருமாவளவன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications