வைத்திலிங்கம் vs இளங்கோவன்.. ஒரே நேரத்தில் ஓபிஎஸ் இபிஎஸ் ஆதரவாளர்களை குறிவைத்து ரெய்டு நடப்பது ஏன்?
திருச்சி: தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு தொகுதி எம்எல்ஏவான ஓபிஎஸ்க்கு நெருக்கமான வைத்திலிங்கம் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகிறார்கள். மறுபக்கம் எடப்பாடி பழனிசாமிக்கு மிகவும் நெருக்கமான சேலம் இளங்கோவனுக்கு சொந்தமான கல்லூரியில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். ஒரே நேரத்தில் ஓபிஎஸ்க்கு நெருக்கமானவர் மற்றும் இபிஎஸ்க்கு நெருக்கமானவர்களிடையே மத்திய அரசின் ஏஜென்சிகள் சோதனை நடத்துவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
2011ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக பதவி விகித்தவர் வைத்திலிங்கம். ஒரத்தநாடு தொகுதி எம்.எல்.ஏ.வான இவர் தற்போது அதிமுகவில் இருந்து பிரிந்து ஓ. பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராக உள்ளார்.

வைத்திலிங்கம் அமைச்சராக இருந்த போது, சென்னை பெருங்களத்தூரில் உள்ள ஒரு தனியார் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட ரூ.28 கோடி லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. அவரின் 2 மகன்கள், உள்பட 11 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடந்ததாக எழுந்த புகாரில் அமலாக்கத்துறை இன்று சோதனை நடத்தி வருகிறது.
தஞ்சாவூர், ஒரத்தநாடு அருகே உள்ள உறந்தைராயன்குடிகாடு பகுதியில் உள்ள வைத்திலிங்கத்திற்கு சொந்தமான வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகிறார்கள். இதேபோல் சென்னையில் வைத்திலிங்கம் குடியிருக்கும் எல்எல்ஏ விடுதியிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். ஒட்டு மொத்தமாக வைத்திலிங்கத்திற்கு சொந்தமான நான்கு இடங்களில் சோதனை நடந்து வருகிறது.
இதேபோல் சேலம் இளங்கோவனுக்கு சொந்தமான கல்லூரியில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதலே சோதனை நடத்தி வருகிறார்கள்.முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வலது கரமாக செயல்பட்டுவரும் இளங்கோவன், சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சங்கத்தின் தலைவர், சேலம் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்து வருகிறார். தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி சங்கத்தின் தலைவராகவும் இருந்தவர் இளங்கோவன்.
சேலம் இளங்கோவனுக்கு சொந்தமாக திருச்சி மாவட்டம் முசிறியில் எம்ஐடி பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் வேளாண் பொறியியல் கல்லூரிகள் உள்ளது. இங்கு வருமான வரித்துறை அதிகாரிகள் காலை முதலே சோதனை நடத்தி வருகிறார்கள். ஒரே நேரத்தில் ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் மற்றும் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர் ஆகியோரின் வீடுகளில் மத்திய அரசின் ஏஜென்சிகள் சோதனை நடத்துவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த ரெய்டுகள் ஒருபுறம் எனில், இதுபற்றி மூத்த பத்திரிக்கையாளர்கள் கூறுகையில், 2026 சட்டசபை தேர்தலுக்கு இப்போதே வேலைகள் ஆரம்பம் ஆகிவிட்டதாக விமர்சிக்கிறார்கள். பாஜக அதிமுக கூட்டணியில் இல்லை என்கிற நிலையில், மீண்டும் கூட்டணிக்கான வாய்ப்புகள் 2026ல் உருவாகலாம் என்றும் கூறுகிறார்கள். அதேபோல் அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் இணைந்து செயல்பட வேண்டும் என்று டெல்லி மேலிடம் விரும்புவதாகவும், அதன்பின்னர் அதிமுக உடன் பாஜக கூட்டணி வைக்கும் வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications