சுஜித்தின் உடலை ஏன் வெளியே காட்டவில்லை? துணியால் மொத்தமாக மறைத்தது ஏன்? தமிழக அரசு விளக்கம்
குழந்தை சுஜித்தின் உடலை நேற்று ஏன் மொத்தமாக துணியை வைத்து மறைத்து இருந்தனர் என்று தமிழக அரசு சார்பாக பேரிடர் மேலாண்மை நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.
Recommended Video
சென்னை: குழந்தை சுஜித்தின் உடலை நேற்று ஏன் மொத்தமாக துணியை வைத்து மறைத்து இருந்தனர் என்று தமிழக அரசு சார்பாக பேரிடர் மேலாண்மை நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.
ஆழ்துளை கிணற்றுக்குள் சிறுவன் சுஜித் விழுந்த சம்பவம் இன்னும் தமிழகத்தை உலுக்கிக்கொண்டு இருக்கிறது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த சுஜித் கடந்த வெள்ளிக்கிழமை மாலை ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தார். இவரை மீட்கும் பணிகள் நான்கு நாட்களாக நடந்து வந்தது.
ஆனால் 80 மணி நேர போராட்டம் தோல்வியில் முடிந்து கடைசியில் சுஜித் சடலமாக மீட்கப்பட்டார். சுஜித்திற்கு நேற்று இறுதிச்சடங்கு நடந்தது.

காட்டவில்லை
இந்த நிலையில் சுஜித்தின் உடலை நேற்று வெளியே யாரிடமும் காட்டவே இல்லை. உடலை துணி மூடியபடிதான் மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். அதேபோல் மொத்தமாக முகத்தையும் மூடிதான் பிரேத பரிசோதனை செய்து கொண்டு வந்தனர். உடலில் எல்லா பகுதியும் கவனமாக மூடப்பட்டு இருந்தது.

எப்படி
இந்த நிலையில் சுஜித் உடலை ஏன் இப்படி மறைத்து இருந்தார்கள் என்று நேற்று பலரும் கேள்வி எழுப்பினார்கள். உடலின் சில பாகங்கள் கிடைக்கவில்லை என்றும் கூட செய்திகள் வெளியானது. தற்போது தமிழக அரசு சார்பாக இந்த அனைத்து கேள்விகளுக்கும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

காட்சிப்படுத்துதல் எப்படி
அதில், உயிரிழந்தவர்களை காட்சி படுத்துவது தொடர்பாக நிறைய விதிகள் இருக்கிறது. அதிலும் குழந்தைகளை, பெண்களை எப்படி காட்சிப்படுத்த வேண்டும் என்றும் விதி இருக்கிறது. இதற்காக மத்திய, மாநில அரசுகளின் தேசிய பேரிடர் குழுக்கள் சில முக்கிய வரையறைகளை வகுத்து இருக்கிறது.

மிக கவனம்
கும்பகோணத்தில் குழந்தைகள் தீ விபத்தில் இறந்த போது, அவர்களின் உடலை காட்சிப்படுத்தியது பெரிய சர்ச்சையானது. அப்போது தமிழக அரசு உலகம் முழுக்க விமர்சனத்தை எதிர்கொண்டது. அதில் இருந்து இதில் தமிழக அரசு மிக கவனமாக விதிகளை வகுத்து பின்பற்றி வருகிறது.

அதுதான் காரணம்
நேற்று நாங்கள் அந்த விதியைத்தான் பின்பற்றினோம். அந்த விதிகளின்படி சுஜித்தின் உடலை பொதுவில் காட்சிப்படுத்த கூடாது. அதேபோல் சுஜித் உடலை நாங்கள் மீட்ட போதும் விதிகளை பின்பற்றினோம். எங்குமே நாங்கள் விதிகளை மீறவில்லை, என்று பேரிடர் மேலாண்மை நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications