கிணற்றை சுத்தம் செய்ய சென்ற 2 பேர் விஷ வாயு தாக்கி உயிரிழப்பு.. தூத்துக்குடியில் சோக சம்பவம்
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே தாளமுத்தூர் பகுதியில் விஷவாயு தாக்கி 2 பேர் பலியாகியுள்ளனர். நீண்ட நாட்களாக பூட்டிக்கிடந்த உறைக் கிணற்றை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் 2 பேர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி தாளமுத்தூர் நேரு காலணி நகரை சேர்ந்தவர் கணேசன் என்பவருக்கு சொந்தமான வீடு ஒன்று உள்ளது. அந்த வீட்டில் ஒரு உறை கிணறு ஒன்று உள்ளது. இந்த உறைக் கிணறானது நீண்ட நாட்களாக திறக்கப்படாமல் இருந்துள்ளது. இந்த நிலையில் அந்த கிணற்றை சுத்தம் செய்ய கணேசன் முடிவெடுத்துள்ளார்.

இதையடுத்து அந்த கிணற்றில் பராமரிப்பு பணி மேற்கொள்வதற்காக தனது உறவினர்களான மாரிமுத்து மற்றும் பவித்திரம் ஆகியோரை அழைத்துள்ளார். அதன்பேரில் இன்று மாரிமுத்து என்பவர் தன்னுடன் 2 பேரை அழைத்து வந்துள்ளார். முதலில் அந்த கிணற்றை தூர்வாருவதற்காக மாரிமுத்து உள்ளே இறங்கியுள்ளார். அவர் இறங்கி வெகு நேரம் ஆகியும் வெளியே வராததால் மேலே இருந்தவர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
இதையடுத்து வீட்டு உரிமையாளர் கணேசன் கிணற்றுக்குள் இறங்கியுள்ளார். உள்ளே இறங்கிய கணேசனும் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதையடுத்து பவித்ரன் மற்றும் இன்னொருவருவர் இருவரையும் தேடி உள்ளே சென்றுள்ளார். மேலும் வெளியில் சில உறவினர்களுக்கு எதாவது சத்தம் கேட்டால் உதவி செய்யுமாறு கூறி கிணற்றுக்குள் இறங்கியுள்ளனர்.
அவர்கள் இருவரும் உள்ளே இறங்கியதும் விஷவாயு தாக்கியுள்ளது. இதையடுத்து அவர்கள் சத்தமிடவே மேலே இருந்தவர்கள் அவர்கள் இரண்டு பேரையும் மீட்டனர். இதையடுத்து உடனடியாக அவர்கள் இருவரையும் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினர் வந்தனர். இதில் முதலில் கிணற்றுக்குள் இறங்கிய மாரிமுத்து மற்றும் கணேசன் ஆகியோர் உயிரிழந்தது தெரியவந்தது. அவரது உடல்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. உறைக்கிணற்றில் இறங்கி சுத்தம் செய்ய முயன்ற போது இரண்டு பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications