குலசை முத்தாரம்மன் கோவிலில் 2- வயது பெண் குழந்தை கடத்தல்.. போலீசார் தீவிர விசாரணை
தூத்துக்குடி: தசரா திருவிழாவை ஒட்டி குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு வந்து இருந்த நாடோடி பழங்குடியின பெண்ணின் 2-வயது குழந்தை கடத்தப்பட்டுள்ளது. குழந்தையை கடத்தியது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் தசரா திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. பத்து நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் குலசேகரன் பட்டினத்தை சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் களை கட்டும். கோ தசரா திருவிழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 12 நாட்கள் இந்த விழா நடைபெறும்.

தசரா திருவிழாவை முன்னிட்டு கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். அம்மனுக்கு விரதம் இருந்து திருக்காப்பு கட்டி பல்வேறு வேடங்களை அணிந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். உடன்குடி, குலசேகரன்பட்டினம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஊர்களில் பல்வேறு குழுக்களாக பிரிந்து வேடம் அணிந்து இறுதி நாளான 10 ஆம் நாள் முத்தாரம்மன் கோவிலுக்கு செல்வார்கள்.
10 ஆம் நாளில் நடைபெறும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சிக்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் போலீசார் மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில், தான் குலசேகரன்பட்டினத்தில் 2 வயது பெண் குழந்தை கடத்தப்பட்டுள்ளது. மதுரையை சேர்ந்த நாடோடி பழங்குடியின பெண்ணின் குழந்தையான கார்த்திகா வள்ளி கடத்தப்பட்டு உள்ளது.
நாடோடி பழங்குடியினத்தை சேர்ந்த அம்சவள்ளி என்ற பெண், தனது கைக்குழந்தையுடன் குலசேகரன்பட்டினத்தில் தங்கி ஊசி, பாசி உள்ளிட்டவற்றைகளை விற்று வந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு அம்சவள்ளி தனது 2-வயது குழந்தையை அருகில் படுக்க வைத்து விட்டு தூங்கியுள்ளார். காலையில் விழித்து பார்த்த போது தனது குழந்தையை காணவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அம்சவள்ளி குலசேகரன்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். குழந்தையை கடத்தி சென்றது யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில் திருவிழாவின் போது 2-வயது குழந்தை கடத்தி செல்லப்பட்டுள்ள சம்பவம் குலசேகரன்பட்டினம் கோவில் பக்தர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications