கொரோனாவுக்கு மனசாட்சியே இல்லையா.. பிறந்து 27 நாள்களே ஆன பச்சிளங்குழந்தைக்கு தொற்று உறுதி!
தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே பிறந்து 27 நாள்களே ஆன பச்சிளங் குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா முதல் அலையை விட, இரண்டாவது அலை சிறு குழந்தைகளை அதிகம் பாதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இடைச்செவல் கிராமத்தை சேர்ந்த ஒரு தம்பதிக்கு கடந்த மாதம் 7-ந்தேதி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும்-சேயும் சில தினங்களில் வீடு திரும்பியுள்ளனர்.
குழந்தையின் தாத்தாவுக்கு லேசான காய்ச்சல் அறிகுறி தென்படவே அவர் கொரோனா பரிசோதனை செய்துள்ளார். இதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுது. அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து வீட்டில் உள்ள பச்சிளம் குழந்தை உள்பட அனைவருக்கும் வில்லிசேரி ஆரம்ப சுகாதார நிலையம் மூலமாக கடந்த 2-ந்தேதி கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் பிறந்து 27நாள்களே ஆன குழந்தைக்கு மட்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை. பச்சிளம் குழந்தைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதையெடுத்து 27 நாள் பச்சிளக்குழந்தை வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட அரசு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.