அடப்பாவமே! நினைச்சி கூட பார்த்திருக்க மாட்டார்களே! தூத்துக்குடியில் தண்ணீர் பிடித்த 3 பெண்கள் பலி
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த 3 பெண்கள் மீது கார் மோதிய விபத்தில் அவர்கள் மூவரும் சம்பவ இடத்திலேயே இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் பெருங்குளத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் நாலுமாவடியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவர் தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து பெங்களூர் சென்று செல்போனுக்கு தேவையான உதிரி பாகங்களை வாங்கினார்.

பிறகு தூத்துக்குடி வழியாக காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது முக்காணி பகுதியில் சாலையின் ஓரம் தெருக்குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த பெண்கள் மீது மணிகண்டன் ஓட்டி வந்த கார் புகுந்தது.
இதில் அதே பகுதியை சேர்ந்த பலவேசம் மனைவி நட்டார் சாந்தி (45), ராஜ்குமாரின் மனைவி பார்வதி (40), சித்திரவேல் மனைவி அமராவதி (59) ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டனர். மேலும் சுந்தரம் என்பவரது மனைவி சண்முகத்தாய் படுகாயம் அடைந்தார்.
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் சண்முகத்தாயை மீட்டு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஆத்தூர் போலீஸாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இந்த தகவலை அடுத்து போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து போய் மூவரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து காரை ஓட்டி வந்த மணிகண்டனை கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்து நடந்த இடத்தில் வேகத்தடை இல்லாததால் இந்த கோர விபத்து நடந்ததாக கூறி அந்த பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து டிஎஸ்பி வசந்தராஜ், வட்டாட்சியர் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பொதுமக்கள் இந்த சாலையில் வேகத்தடை இல்லாததால் எப்போதும் வாகனங்கள் சீறிபாய்ந்து செல்கின்றன. இதனால் எத்தனையோ முறை விபத்துகள் நடந்துள்ளது. சாலையின் இருபுறமும் தெருக்கள் உள்ளன. எனவே நாங்கள் அடிக்கடி சாலையை கடக்கும் போது அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது.
எனவே இங்கு வேகத்தடை அமைக்குமாறு கோரிக்கை விடுத்தனர். அது போல் சாலையின் இரு புறமும் தெருவிளக்குகள் இரவு முழுவதும் ஒளிர செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் பொதுமக்களிடம் உறுதி அளித்தனர்.
இதையடுத்து அந்த பகுதியில் பேரிகார்டுகளை அமைத்து வாகனங்களின் வேகத்தை குறைத்து செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் இன்று இரவுக்குள் வேகத்தடை அமைத்து தரப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். அதிகாலை நேரத்தில் தெருவோரம் குழாயில் தண்ணீர் பிடித்த போது 3 பெண்கள் இறந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications