அண்ணாச்சி.. இச்சாதாரி பாம்பின் நாகமணி.. விலை ரூ.50 கோடி.. தூத்துக்குடியில் சதுரங்கவேட்டை பாணி மோசடி
தூத்துக்குடி: சதுரங்க வேட்டை பட பாணியில் தூத்துகுடியில் மிகப்பெரிய மோசடி ஒன்றை நடத்த கும்பல் ஒன்று திட்டமிட்டு இருக்கிறது. இச்சாதாரி பாம்பின் நாகமணியை 50 கோடி ரூபாய்க்கு விற்க முயன்ற கும்பல் கைது செய்யப்பட்டு உள்ளது.
சதுரங்க வேட்டை படத்தில் தமிழ்நாட்டில் நடந்த முக்கியமான மோசடி சம்பவங்களை எல்லாம் தொகுத்து சுவாரசியமாக கதை அமைத்து இருப்பார்கள். இரிடியம் விற்பனை, மண்ணுளி பாம்பு விற்பனை என்று தமிழ்நாட்டில் பெரிய பரபரப்பை ஏற்படுத்திய மோசடி சம்பவங்கள் அனைத்தையும் சுவாரசியமாக காட்சிப்படுத்தி இருப்பார்கள். பொய்யான மோசடி திட்டங்களில் மக்கள் ஏமாற்றம் அடைய கூடாது என்பதற்காக இந்த படம் எடுக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில்தான் இரிடியம், மண்ணுளி பாம்பு மோசடி போலவே மிக முக்கியமான மோசடி ஒன்று தூத்துக்குடியில் நடைபெற்று இருக்கிறது. இச்சாதாரி பாம்பின் நாகமணிக்காக ஒரு கேங் வாரே தூத்துக்குடியில் நடைபெற்று உள்ளது.

என்ன சம்பவம்
தூத்துக்குடி மாவட்டம் அருகே இருக்கும் ஓசனூத்து கிராமத்தில் இந்த சம்பவம் நடந்து உள்ளது. அந்த பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் தன்னிடம் இச்சாதாரி பாம்பின் நாகமணி இருப்பதாக ஊரில் இருந்த சில பெரியவர்களிடம் தெரிவித்து இருக்கிறார். தன்னிடம் விலை மதிக்க முடியாத இச்சாதாரி பாம்பின் நாகமணி இருப்பதாகவும் இதை வாங்கினால் சில வருடங்களில் கோடீஸ்வரர் ஆகிவிடலாம். அதிர்ஷ்டம் நம்மை தேடி வரும். பல கோடிக்கு அதிபதியாகி சக்ரவர்த்தியாக வாழலாம். பொன், பொருள், பெருமை எல்லாம் தேடி வரும் என்று ஊரில் இருக்கும் பணக்காரர்கள் சிலரை அணுகி இருக்கிறார்.

சேட்டு
இவர்கள் மூலம் நகை கடை சேட்டு ஒருவரின் அறிமுகம் கிடைத்து, அவரிடம் இந்த இச்சாதாரி பாம்பின் நாகமணியை விற்க முயன்று இருக்கிறார். மஞ்சள் நிறத்தில் குண்டுமணி போல இருக்கும் இச்சாதாரி பாம்பின் நாகமணி இரவு நேரத்தில் சூரியன் போல மின்னும். இதன் ஒளியில் இருந்து சக்தி வெளிப்படும். இந்த சக்தி நம் அருகில் இருந்தால் நல்லது நடக்கும். வாழ்க்கையே மாறிவிடும் என்று அந்த இச்சாதாரி பாம்பின் நாகமணியை எப்படியாவது சேட்டிடம் விற்க முயன்று இருக்கிறார். இதற்கு அவர் சொன்ன விலை மட்டும் 50 கோடி ரூபாய். ஆம் இவ்வளவு கோடி கொடுத்தால்தான் இச்சாதாரி பாம்பின் நாகமணியை அடைய முடியும் என்றும் கூறி இருக்கிறார்.

கதை
அதோடு மிகவும் "ரேர் பீஸ்" இது.. கஷ்டப்பட்டு இச்சாதாரி பாம்பிடம் இருந்து நாகமணி எடுத்து வந்து இருக்கிறேன். இது வெளியே எங்கும் கிடைக்காது என்றும் வாய்க்கு வந்ததை எல்லாம் சுப்பிரமணி கதையாக அளந்து விட்டு இருக்கிறார். இந்த விஷயம் அதே பகுதியை சேர்ந்த பழனி என்ற நபருக்கு தெரிந்து இருக்கிறது. இச்சாதாரி பாம்பின் நாகமணியின் மவுசை உணர்ந்து கொண்ட பழனி அதை எப்படியாவது அபகரிக்கலாம் என்று திட்டமிட்டு இருக்கிறார். இச்சாதாரி பாம்பின் நாகமணிக்கு நீ சொல்லும் விலையை நான் கொடுக்கிறேன்.. என்னிடம் இச்சாதாரி பாம்பின் நாகமணியை காட்டு என்று பழனி சுப்பிரமணியிடம் பேரம் பேசி இருக்கிறார். இவர்கள் காட்டில் வைத்து இச்சாதாரி பாம்பின் நாகமணியை வாங்குவது குறித்து விவாதம் செய்துள்ளனர்.

மோசடி
இதில் சுப்பிரமணியிடம் இருந்து எப்படியாவது இச்சாதாரி பாம்பின் நாகமணியை திருடி செல்ல திட்டமிட்ட பழனி, அவருடன் சண்டை போட்டுள்ளார். சுப்பிரமணியும் பாதுகாப்பிற்கு தன்னுடன் சிலரை கூட்டி வந்துள்ளார். இந்த நிலையில் இரண்டு தரப்பிற்கும் காட்டுக்குள்ளேயே வைத்து மோதல் ஏற்பட்டுள்ளது. மாறி மாறி இரண்டு தரப்பும் மோசமாக தாக்கி உள்ளனர். இதை பயன்படுத்திக் கொண்டு அங்கு இருந்த வேல்முருகன் என்ற இன்னொரு நபர் இச்சாதாரி பாம்பின் நாகமணியை அங்கிருந்து திருடிக்கொண்டு தப்பித்து சென்றார். அவரை இரண்டு குரூப்பும் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

போலீஸ்
இதையடுத்து போலீசில் நேரடியாக சென்று சுப்பிரமணி புகார் அளித்தார். ஆனால் எங்கே இச்சாதாரி பாம்பின் நாகமணி என்று சொன்னால் மாட்டிகொள்வோமோ என்று பயந்து வேல்முருகன் தன்னுடைய போன் மற்றும் பணத்தை திருடிவிட்டதாக கூறி இருக்கிறார். போலீஸ் தொடக்கத்திலேயே இதில் சந்தேகம் அடைந்த நிலையில், அந்த சாலையில் உள்ள சிசிடிவி கேமராக்களை வைத்து வேல்முருகன் சென்ற இடத்தை கண்டுபிடித்தனர். வேல்முருகன் தலைமறைவான இடத்தை கண்டுபிடித்து போலீசார் அவரை கைது செய்தனர்.

கைது
இதன்பின் வேல்முருகனிடம்.. நீ திருடிய செல்போன் எங்கே என்று போலீஸ் விசாரிக்க.. என்ன செல்போனா.. நான் திருட்டிட்டு போனது இச்சாதாரி பாம்பின் நாகமணி என்று உளறி இருக்கிறார் வேல்முருகன். அதோடு காட்டுக்குள் நடந்த மோதல் குறித்தும் புட்டு புட்டு வைத்துள்ளார். இதையடுத்து சுதாரித்த போலீஸ் வேல்முருகன், சுப்பிரமணி, பழனி என்று எல்லோரையும் தற்போது தேடி வருகிறார்கள். விசாரணையின் முடிவில் சுப்பிரமணி இச்சாதாரி பாம்பின் நாகமணியை விற்க முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது.
Recommended Video

சோதனை
இந்த இச்சாதாரி பாம்பின் நாகமணியை கைப்பற்றிய போலீசார் அதை சோதனை செய்துள்ளனர். அதன்பின் அது வெறும் மஞ்சள் நிறம் கொண்ட மின்னும் பெயிண்ட் அடிக்கப்பட்ட பிளாஸ்டிக் என்று கண்டுபிடித்தனர். இந்த பிளாஸ்டிக் குண்டுமணியைத்தான் இச்சாதாரி பாம்பின் நாகமணி என்று பொய்யாக ஏமாற்றி பல கோடிக்கு விற்க பார்த்து இருக்கிறார் சுப்பிரமணி. தற்போது இவரை கைது செய்வதற்காக போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications