எடப்பாடிக்காக காத்துக்கிடந்த அதிமுகவினர்.. திடீரென வந்த விஜய் சேதுபதி! உடனே தொண்டர்கள் செய்த காரியம்
தூத்துக்குடி: நெல்லையில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தூத்துக்குடிக்கு வந்த எடப்பாடி பழனிசாமியை வரவேற்க, அதிமுக தொண்டர்கள் வாகை குளம் விமான நிலையத்தில் காத்திருந்தனர். அப்போது அங்கு திடீரென நடிகர் விஜய் சேதுபதி வந்தார். அவரை பார்த்ததும் அதிமுகவினர் அங்கிருந்து ஓடிச்சென்று விஜய் சேதுபதியுடன் ஆர்வத்துடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.
நெல்லை மாவட்டம் அம்பையில் அதிமுக பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று நெல்லை வந்தார். தூத்துக்குடிக்கு விமானம் மூலமாக வந்த எடப்பாடி பழனிசாமி, அங்கிருந்து கார் மூலம் நெல்லை மாவட்டம் அம்பை சென்றார்.

முன்னதாக தூத்துக்குடி வந்த எடப்பாடி பழனிசாமிக்கு, தூத்துக்குடி மாவட்ட அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது அங்கு கனமழையும் பெய்து கொண்டிருந்தது. மழையையும் பொருட்படுத்தாமல் அந்த கொட்டும் மழையிலும் அதிமுகவினர் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர். முன்னதாக எடப்பாடியை வரவேற்க அதிமுக நிர்வாகிகள் திரண்டு இருந்தனர்.
அப்போது அங்கு நடிகர் விஜய் சேதுபதி திடீரென வருகை தந்தார். விஜய் சேதுபதியை பார்த்ததும் எடப்பாடியை வரவேற்பதற்காக நின்றுகொண்டிருந்த அதிமுகவினர் ஆர்வத்துடன் ஓடிச்சென்று அவருடன் செல்பி எடுத்துக்கொண்டனர். இதையடுத்து சற்று நேரத்தில் அங்கு வந்த எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவினர் வரவேற்பு அளித்தனர். இதையடுத்து, அம்பையில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் பங்கேற்ற எடப்பாடி பழனிசாமி, திமுகவை கடுமையாக விமர்சித்தார்.
எடப்பாடி பழனிசாமி கூறுகையில், "நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் ஒரு சதவீகிதம் கூடுதலாக வாக்குகள் பெற்றுள்ளோம். ஆனால் அதிமுக சரிந்துவிட்டது என்று சொல்கிறார்கள். சரிந்து போய்விட்டால் வாக்கு சதவிகிதம் எப்படி உயரும். 2014 லோக்சபா தேர்தலில் திமுக ஒரு இடம் கூட வெற்றி பெறவில்லை. மாறி மாறித்தான் ஆட்சி மாற்றம் வந்து கொண்டு இருக்கிறது.
திமுக கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக ஊடக செய்திகள் வருகின்றன. திமுக ஆட்சியில் வீடு கட்ட முடியாது. கட்டுமான பொருட்களின் விலை உயர்ந்துவிட்டது. ஆட்சி பொறுப்பேற்று 40 மாதங்களில் திமுக எந்த நன்மையும் செய்யவில்லை. உதயநிதிக்கு துணை முதல்வர் பொறுப்பு கொடுத்தததுதான் ஸ்டாலினின் சாதனை. எந்த திட்டமும் வரவில்லை.
கடன் மட்டும் தான் வாங்கிக் கொண்டு இருக்கிறார்கள். திமுக ஆட்சி வரும் முன்பு ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும் நீட் தேர்வை ரத்து செய்வதாக கூறினார்கள். ஆனால், ஆட்சிக்க்கு வந்து 40 மாதம் ஆகிவிட்டது என்ன செய்தீர்கள்.. நீட் தேர்வை ரத்து செய்ய ரகசியம் இருப்பதாக உதயநிதி சொன்னார். ஆனால் இன்று வரை ரகசியத்தை வெளியிடவில்லை" என்றார்.












Click it and Unblock the Notifications