பதற்றத்தில் அண்ணாமலை.. தமிழ்நாட்டில் பாஜகவை காலி செய்துவிடுவார்.. கடம்பூர் ராஜூ விமர்சனம்!
தமிழ்நாட்டில் பாஜகவை அண்ணாமலையே காலி செய்து விடுவார் என்று கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.
தூத்துக்குடி: தமிழ்நாட்டில் பாஜகவை அண்ணாமலையே காலி செய்து விடுவார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ விமர்சித்துள்ளார். அதேபோல் அண்ணாமலை பதற்றத்தின் உச்சியில் இருப்பதாகவும் கூறிய அவர், கட்சிக்குள் முரண்பாடு வந்தால் நிர்வாகிகள் வெளியேறுவது சாதாரணம் என்று கூறியுள்ளார்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக பிற்படுத்தப்பட்டோர் பிரிவு அணியின் துணைத் தலைவர் கோமதி, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற அலுவலகத்தில் வைத்து அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமையில் அதிமுகவில் இணைந்தார்.
இதனைத் தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறுகையில், எந்த தேர்தல் வந்தாலும் சரி அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமையும். 2016ல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருக்கும் போது அதிமுக தனியாக நின்று வெற்றி பெற்றது.

அதிமுக - பாஜக கூட்டணி
இதை உருவாக்கியவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தான். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி நாட்டின் நலன் கருதி, நாட்டிற்கு நல்ல பிரதமர் வேண்டும் என்று நினைத்து பாஜகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தோம். கடந்த உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தலைவர் அண்ணாமலை வந்த பிறகு பாஜகவுக்கு கேட்ட இடங்கள் கிடைக்கவில்லை எனக் கூறி தன்னந்தனியாக நின்று போட்டியிட்டது.

பாஜகவில் நயினார் நாகேந்திரன்
அதன் விளைவையும் அவர்கள் பார்த்தார்கள். அவர்களின் நிலை அறிந்த பிறகு தான் மீண்டும் எங்களுடன் கூட்டணிக்கு வந்தார்கள். காலம் காலமாக ஒருவர் கட்சியிலிருந்து மாற்றுக் கட்சிக்கு செல்வது அவர்களின் தனிப்பட்ட விருப்பம். இது அண்ணாமலைக்கு ஏன் புரியவில்லை என்பது புதிராக இருக்கிறது. எந்த நிர்வாகியாக இருந்தாலும் ஒரு கட்சியில் கருத்து வேறுபாடு முரண்பாடு இருந்தால் அவர்கள் வெளியேறுவார்கள். அது அவரின் தனிப்பட்ட விருப்பம். இதே போல தான் அதிமுக முன்னாள் அமைச்சராக இருந்தவர் நயினார் நாகேந்திரன். தற்போது பாஜகவில் இருக்கிறார்.

அண்ணாமலைக்கு பயம் ஏன்?
இதை நாங்கள் பெரிதாக எடுக்கவில்லை. அது அவரின் தனிப்பட்ட முடிவு. முதலில் பாஜகவின் ஐடி விங் நிர்வாகி நிர்மல் குமார் அதிமுகவில் இனைந்த போது வாழ்த்துக்கள் சொன்னார். அது பண்பட்ட அரசியல். ஆனால் அதன் பின்னர் அவர் பேச்சில் படபடப்பு ஏற்பட்டுள்ளது. அவர் அச்சத்தின் உச்சத்தில் இருக்கிறார். அண்ணாமலையின் பேச்சில் இந்த படபடப்பும் பயமும் எதுக்கு என்று தெரியவில்லை.

பாஜகவை காலி செய்துவிடுவார்
ஒரு அண்ணாமலை அல்ல, ஒரு லட்சம் அண்ணாமலை வந்தாலும் அதிமுகவை அசைத்துப் பார்க்க முடியாது. அடிப்படை அரசியலில் கூட தெரியாதவர் அண்ணாமலை. இவர் கட்சியிலிருந்து என்ன செய்யப் போகிறார் என்று தெரியவில்லை. வரும் காலங்களில் தமிழ்நாட்டில் பாஜகவை அண்ணாமலை காலி செய்து விடுவார். இதுதான் நடக்கும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications