"ஒரு பக்கம் ஆன்மீக பயணம்.. மறுபுறம் கூட்டணி குறித்து பரபர.." எடப்பாடி பழனிசாமி போடும் அரசியல் கணக்கு
தூத்துக்குடி: அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான ஒரு பக்கம் திருச்செந்தூர் கோயிலில் வழிப்பட்ட நிலையில், மறுபுறம் தேர்தல் நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இன்று தூத்துக்குடிக்கு எடப்பாடி பழனிசாமி வருகை தந்தார். திருச்செந்தூர் முருகன் கோவிலில் வந்து சாமி தரிசனம் செய்வதற்காக தூத்துகுக்குடி விமானம் நிலையத்திற்கு வந்த எடப்பாடி பழனிசாமியை வரவேற்க அதிமுகவினர் திரண்டு இருந்தனர்.

எடப்பாடி பழனிசாமியை வரவேற்று தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் பகுதிகளில் கட்சியினர் போஸ்டர்களையும் அடித்து இருந்தனர். நாளிதழ்களில் அதிமுக நிர்வாகிகள் பலரும் எடப்பாடியை வரவேற்று விளம்பரமும் கொடுத்து இருந்தனர். இந்த நிலையில் இன்று காலை எடப்பாடி பழனிசாமியை வரவேற்க வருகை தந்து இருந்த அதிமுகவின் இரு பிரிவினரிடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜூ ஆதரவாளர்களுக்கும் எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் சீனி ராஜுக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. சீனிராஜ் அதிமுகவில் இருந்து 8 மாதங்களுக்கு முன்பே நீக்கப்பட்டதாகவும் இன்று எடப்பாடியை வரவேற்று அவர் அளித்த விளம்பரத்தில் கடம்பூர் ராஜூ புகைப்படம் இடம் பெற்றதற்கு அவரது ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.
அரசியல் கணக்கு: அதேநேரம் மறுபுறம் எடப்பாடி பழனிசாமி அடுத்தாண்டு மக்களவை தேர்தல் குறித்தும் நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு, தேர்தல் குறித்து சென்னையில் மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனையும் நடத்தியிருந்தார்.
அப்போது கூட்டணி குறித்த கேள்விக்கு, "தேர்தலுக்கு இன்னும் நாள் இருக்கிறது. அப்போது பார்த்துக் கொள்ளலாம்" என்பது போலச் சொன்னதாகக் கூறப்படுகிறது. அதிமுக- பாஜக கூட்டணி தொடரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி இப்படிக் கூறியது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications