நாட்டின் பாதுகாப்புக்கு எதிராக கருத்து வெளியிட்டால் சமூக ஊடகங்கள் முடக்கப்படும்: எல்.முருகன்
தூத்துக்குடி : நாட்டின் இறையாண்மைக்கும், தேச பாதுகாப்பிற்கும் எதிராக கருத்துகளை வெளியிடும் சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்கப்படும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் எச்சரித்துள்ளார்.
Recommended Video
நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு எதிராக செயல்படும் யூ-டியூப் சேனல்கள், இணையதளங்கள் உள்ளிட்டவை மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் அடிப்படையில் கடந்த டிசம்பர் மாதம் 20 யூ-டியூப் சேனல்கள் முடக்கப்பட்டன. இதேபோல், தொடர்ந்து நாட்டுக்கு எதிராக சர்ச்சை கருத்துகளை வெளியிடும் சமூக ஊடகங்களை மத்திய அரசு முடக்கி வருகிறது.
இந்நிலையில், தேச பாதுகாப்பிற்கு எதிராக எந்த ஒரு சமூக ஊடகம் கருத்து வெளியிட்டாலும், அந்த ஊடகம் தடை செய்யப்படும் என மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
ஒண்டி வீரன் 251வது பிறந்த நாளை ஒட்டி தபால் தலை வெளியிடும் நிகழ்விற்காக தூத்துக்குடி வந்த மத்திய இணை அமைச்சர் எல். முருகன், விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது : கருத்து சுதந்திரம் என்பது நமது நாட்டில் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கும் ஒரு எல்லை உள்ளது. மத்திய அரசாங்கத்திற்கு எதிராகவும், இந்திய ராணுவத்திற்கு எதிராகவும் அல்லது நாட்டின் பாதுகாப்பிற்கு எதிராக எந்த நிறுவனம் செயல்பட்டாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த ஒரு வருடத்தில் 100க்கும் அதிகமான யூ டியூப் சேனல்கள் முடக்கப்பட்டது. நேற்றுகூட 8 யூ டியூப் சேனல்கள் முடக்கப்பட்டது. இது எல்லாம் தேசத்திற்கு எதிராக கருத்து சொல்வது, இந்திய ராணுவத்திற்கு எதிராக கருத்து சொல்வது போன்ற செயல்களை செய்தவை. சில பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு கொண்டு இருக்கிறது. அதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை மத்திய அரசு எடுக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
தேசத்திற்கு எதிராக கருத்துகளை வெளியிடும் எந்த யூடியப் சேனல் ஆக இருந்தாலும் சரி, அல்லது எந்த ஒரு சமூக ஊடகமாக இருந்தாலும் சரி அதன் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய இணை அமைச்சர் எல். முருகன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தவறான செய்திகளை வெளியிட்ட 94 யூ-டியூப் சேனல்கள், 19 சமூக வலைத்தள கணக்குகள், 747 வலைத்தள முகவரிகள் ஆகியவற்றை தகவல் தொழில்நுட்ப சட்டம் 69A பிரிவின் கீழ் முடக்கியதாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.