ஆதார் கார்டு மாறுதலுக்கு தூத்துக்குடி தாலுகா ஆபீசில் லஞ்சமா? பெண்ணின் புகாரை கேட்டு அதிர்ந்த கனிமொழி
தூத்துக்குடி: தமிழகத்தில் லஞ்ச புகார்கள் அதிகரித்துள்ளதுடன், அரசு துறையில் பொறுப்புள்ள பதவிகளில் உள்ள அதிகாரிகளே லஞ்சம் வாங்கி கைது செய்யப்படுகிறார்கள். இது தொடர்பான வழக்குகள் நீதிமன்றம் வரை சென்று சம்பந்தப்பட்டவர்களுக்கு நீதிமன்றமும் உரிய தண்டனைகளை தந்து வருகிறது. எனினும்கூட லஞ்ச புகார்கள் குறையவில்லை. இந்நிலையில், திமுக எம்பி கனிமொழியிடம் பெண் ஒருவர் தன்னுடைய லஞ்ச புகாரை கொண்டு சென்றுள்ளார்.
தமிழகத்தில் 2021 முதல் 2025 மார்ச் வரை லஞ்ச ஒழிப்பு போலீசாரின் புள்ளி விவரம் ஒன்று சமீபத்தில் வெளியாகியிருந்தது.

அரசு அதிகாரிகள்
அதில், லஞ்சம் வாங்கி கைதானவர்களில் டாப்பில் உள்ளது வருவாய்த்துறைதான்.. அதாவது சர்வே துறையில், 29 பேர் உட்பட தாசில்தார் முதல் தலையாரி வரை மொத்தம், 92 பேர் கைதாகி இருக்கிறார்களாம்.. 2வது இடத்தில் மின்வாரியம் உள்ளது.. அடுத்து உள்ளாட்சி, அடுத்து பத்திரப்பதிவு துறை என லஞ்சம் லிஸ்ட் அதிர வைத்தது.
அரசு துறைகளில் லஞ்சம்
அரசாங்க பணியில் லஞ்சம் வாங்கியவர்களின் பட்டியலில், வருவாய் துறை, மின்வாரியம் முதல் இரண்டு இடங்களை பிடித்திருப்பது, தமிழக மக்களை கவலை கொள்ள செய்தது. ஆனாலும், சில அரசு ஊழியர்கள், அதிகாரிகளின் லஞ்ச புகார்கள் குறையாமலேயே உள்ளது.. இந்நிலையில், திமுக எம்பி கனிமொழியிடம் ஒரு பெண் நேரடியாகவே இன்று புகாராக சொல்லிவிட்டார்.
இன்று திருவைகுண்டம் அரசு மருத்துவமனையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஐயா ஆர்.நல்லகண்ணு பெயரில் கட்டப்படவுள்ள கூடுதல் கட்டடத்திற்கு திமுக எம்பி கனிமொழி அடிக்கல் நாட்டினார்.. பிறகு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு, சிகிச்சை பெறுபவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார்.
குறைகளை கேட்ட கனிமொழி
அதேபோல் திருவைகுண்டம் அருகே அணியாபரநல்லூரில் உள்ள. தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய நிறுவனத்தின் பால் பொருட்கள் உற்பத்தி ஆலையில் நடைபெற்றுவரும் மேம்பாட்டுப் பணிகளை, திமுக எம்பி கனிமொழி இன்று அதிகாரிகளுடன் நேரடியாக சென்று ஆய்வு செய்தார்.
பிறகு திருவைகுண்டத்தில் நடைபெற்றுவரும் புதிய பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகளை கனிமொழி ஆய்வு செய்தார்.. அப்போது அவருடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் திரு. இளம்பகவத், திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் அமிர்தராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதன்பிறகு, நாசரேத் அருகே சின்னமாடன்குடியிருப்பு பகுதிக்கு சென்று அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.. அப்போது அர்ச்சுதக்கனி என்ற பெண் கனிமொழியிடம் வந்து தன்னுடைய புகாரை கூறினார்.
லஞ்சம் லஞ்சம் லஞ்சம்
அந்த பெண் கனிமொழியிடம் பேசும்போது, "என் ஆதார் கார்டில் பெயர் மாற்றம் செய்வதற்காக ஏரல் தாலுகா ஆபீசுக்கு போனேன்.. ஆதார் கார்டு பெயர் மாற்றம் தொடர்பாக கேட்டதற்கு 5000 ரூபாய் லஞ்சம் வேண்டும் என்று என்னிடம் கேட்கிறார்கள்.. எங்க போனாலும் லஞ்சம்.. லஞ்சம்... லஞ்சம்னு கேக்குறாங்க" என்று அந்த பெண் தன்னுடைய குமுறலை கொட்டினார்.
எங்க ஓட்டு உங்களுக்குதான்
உடனே கனிமொழி சம்பந்தப்பட்ட அதிகாரியை அழைத்து, அப்பெண்ணின் புகாரை பரிசீலிக்குமாறு சொன்னார்.. பிறகு நாளைக்கே தாலுகா ஆபீஸ் போய் பாருங்கள், சரி செய்து தருவார்கள்" என்றார்.
இதைக்கேட்டு மகிழ்ச்சியடைந்த அர்ச்சுதக்கனி, கனிமொழிக்கு கைகளை கூப்பி நன்றி சொன்னார்.. "எங்க ஓட்டு உங்களுக்குதான்" என்றார்..
அதற்கு கனிமொழி, "அதுக்காக கிடையாது, உங்களுக்கு என்ன பிரச்சனை என்றாலும் என்னுடைய ஆபீசுக்கு வாங்க" என்று சொல்லி அப்பெண்ணை அனுப்பி வைத்தார்.












Click it and Unblock the Notifications