பெண்களுடன் அன்னையர் தினம், பிறந்தநாள் கொண்டாடிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
ஒட்டப்பிடாரம்: ஒட்டப்பிடாரத்தில் பெண்களுடன் அன்னையர் தினத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொண்டாடினார்.
ஒட்டப்பிடாரம் அதிமுக வேட்பாளர் மோகனை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரசாரம் செய்தார். தூத்துக்குடி மாவட்டம் வசவப்புரம், வல்லநாடு, செக்காரக்குடி ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசுகையில் சிலரது சூழ்ச்சியால் இந்த சட்டமன்ற தேர்தலை சந்திக்கிறோம். உங்களுக்காக உருவாக்கப்பட்ட இயக்கம் அதிமுக, எம்ஜிஆர் உருவாக்கிய இந்த இயக்கத்தை கட்டிக் காத்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.
நான் தொண்டனாக இருந்துதான் பேசிக்கொண்டு இருக்கிறேன். நான் விவசாய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். நீங்கள் போடும் கட்டளையை நிறைவேற்றும் இடத்தில் நான் இருக்கிறேன்.
மு.க.ஸ்டாலின் தலைவர் என்ற கர்வம் பிடித்து பேசிக்கொண்டு இருக்கிறார். டி.டி.வி.தினகரன் எப்படியாவது கட்சியை உடைத்து, ஆட்சியை கவிழ்த்து ஆதாயம் தேட வேண்டும் என்று துடிக்கிறார்.
மதுரையில் மு.க.ஸ்டாலின் ஒரு கூட்டத்தில் பேசும்போது, நான் சிவப்பாக இருக்கிறேன். கவர்ச்சியாக இருக்கிறேன். தற்போது 4 நாட்கள் தேர்தல் பிரசாரம் செய்ததால் கருப்பாகிவிட்டதாக மக்களிடம் பேசுகிறார். இப்படிப்பட்ட தலைவர்கள் நாட்டுக்கு என்ன செய்வார்கள்? என முதல்வர் கேள்வி எழுப்பினார்.
நாடு முழுவதும் நேற்று அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் செக்காரக்குடி பகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார் முதல்வர் பழனிச்சாமி.
அப்போது செக்காரக்குடி கிராம பெண்கள் மற்றும் வயதான பெண்களுடன் இணைந்து அன்னையர் தினத்தையும் தனது 65-ஆவது பிறந்தநாளையும் கொண்டாடினார். பின்னர் கேக் வெட்டி அவர்களுக்கு வழங்கினார்.