தவெகவில் சீட் கிடைக்காத விரக்தி.. திமுகவில் இணைந்தார் அஜிதா! பின்னணியில் அனிதா!
தூத்துக்குடி: தவெகவில் மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்காத விரக்தியில் இருந்த அஜிதா, தற்போது சீட் கிடைக்காததால் மேலும் அதிருப்தியில் இருந்தார். இந்த நிலையில் இன்று தூத்துக்குடியில் திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி முன்னிலையில் அஜிதா திமுகவில் இணைந்துள்ளார். இதன் பின்னணியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இருப்பதாக தெரியவந்துள்ளது.
தவெகவில் தூத்துக்குடி மாவட்டப் பொறுப்பாளராக இருந்தவர் அஜிதா. இதையடுத்து தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பதவி அளிக்கப்படும் என்று அஜிதா எதிர்பார்த்திருந்தார். ஆனால் விஜய்யின் குட்புக்கில் அஜிதாவின் பெயர் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக சாமுவேல் என்பவருக்கு மாவட்டச் செயலாளர் பதவி அளிக்கப்பட்டது.

இதனால் அதிருப்தி அடைந்த அஜிதா, தனது ஆதரவாளர்களுடன் நேரடியாக பனையூர் சென்று விஜய்யின் காரை மறித்தார். தொடர்ந்து போராட்டத்திலும் ஈடுபட்டார். இதன்பின் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட அஜிதா, தவெகவில் இருந்து விலக மாட்டேன் என்று அறிவித்தார். இருந்தாலும் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட தவெக தலைமை வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பி இருந்தார்.
ஆனால் அந்த தொகுதிக்கு விஜய்யின் நண்பர் ஸ்ரீநாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனால் அஜிதா ஆதரவாளர்கள் பலரும் அதிருப்தியில் இருந்தனர். இதனிடையே அஜிதாவை தங்கள் பக்கம் கொண்டு வர திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் தரப்பில் முயற்சிகள் நடைபெற்றது. அதற்கேற்றபடி, அஜிதாவின் ஆதரவாளர்களும் வேறு கட்சிக்கு செல்லலாம் என்று அழுத்தம் கொடுக்க தொடங்கினர்.
இந்த நிலையில் தூத்துக்குடியில் இன்று திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி முன்னிலையில் அஜிதா ஆக்னல் திமுகவில் இணைந்துள்ளார். அஜிதா திமுக பக்கம் வந்தால், திருச்செந்தூர் மீனவர்களின் வாக்குகளை பெற்றுவிட முடியும் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கருதுகிறார். இதனால் அஜிதா தரப்புடன் அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பு தீவிரமாக பேசி திமுகவில் இணைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இது தவெகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் மாவட்டச் செயலாளர் பதவி இல்லையென்றாலும், தவெகவில் அஜிதா தொடர்ந்து பணியாற்றி வந்தார். விளாத்திகுளம் பிரச்சனையின் போது தவெக சார்பாக நேரில் சென்றவர் அஜிதா தான். ஆனால் தவெக தலைமை அஜிதாவை கண்டுகொள்ளாதது ஏன் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications