அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனும் வரல.. அமலாக்கத்துறையும் வரல.. வழக்கு விசாரணையை ஒத்திவைத்த நீதிபதி!
தூத்துக்குடி: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சார்பில் விசாரணைக்கு யாரும் ஆஜராகாததால் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசின் மீன்வளத்துறை அமைச்சராக இருக்கும் அனிதா ராதாகிருஷ்ணன் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் வருமானத்திற்கு மீறி சொத்து சேர்த்ததாக திமுக அரசு 2006ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது. 2001 முதல் 2006 வரை அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2020ல் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது.

இந்நிலையில், கடந்த 2017ம் ஆண்டு மதுரை உயர் நீதிமன்ற கிளை அளித்த தீர்ப்புக்கு எதிராக 5 ஆண்டுகளுக்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2022 ஆகஸ்ட் மாதம் அனிதா ராதாகிருஷ்ணன் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் "ஆட்சி மாறினால் நீதிமன்றமும் அரசு இயந்திரங்களும் மாறிவிட வேண்டுமா? ஆட்சி மாறுவதற்கும் இதுபோன்ற விசாரணைகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. உங்கள் கட்சி உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்கலாம். ஆனால் நீதிமன்றமும், அரசு இயந்திரமும் அப்படி அல்ல" என உச்சநீதிமன்றம் விளாசியது.
இதைத்தொடர்ந்து, கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி இந்த வழக்கு தூத்துக்குடி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது அமலாக்கத்துறை சார்பில், முக்கிய ஆவணங்கள் இருப்பதால் இந்த வழக்கில் எங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டது. ஏற்கனவே அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த தொடங்கிய நிலையில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் 6.5 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளையும் முடக்கியது. இந்த வழக்கில் அமலாக்கத்துறை முறையீட்டு மனு மீது இன்று உத்தரவு பிறப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணையை செப்டம்பர் 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம். அமலாக்கத்துறை, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சார்பில் விசாரணைக்கு யாரும் ஆஜராகாததால் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications