அவரா சாகலை..ஜெயலலிதாவை கொன்றது பாஜக தான்! காரணம் என்ன தெரியுமா? பரபரப்பை பற்ற வைத்த திமுக எம்எல்ஏ!
தூத்துக்குடி : முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை கொன்றது மோடிதான் என விளாத்திகுளம் திமுக எம்எல்ஏவும், முன்னாள் அதிமுக நிர்வாகியுமான மார்கண்டேயன் குற்றம் சாட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக கடந்த 2017ஆம் ஆண்டு நீதிபதி ஆறுமுக சாமி தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. சுமார் ஐந்து ஆண்டு காலமாக இந்த விசாரணை நடந்து வந்த நிலையில் பலமுறை ஆணையத்தின் விசாரணை காலம் நீட்டிக்கப்பட்டது.
விசாரணை முடிவடைந்துள்ள நிலையில் சில வாரங்களுக்கு முன்னர் தேதி ஆணையத்தின் அறிக்கையை ஆணையத்தின் விசாரணை தலைவரான ஆறுமுகசாமி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தாக்கல் செய்தார்.
நாவடக்கம் தேவை- ஜெயலலிதா குறித்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் பேச்சுக்கு ஜெயக்குமார் கண்டனம்
ஜெயலலிதா மரணம்
ஆணைய அறிக்கையில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா,முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர், அப்போதைய தலைமை செயலாளர் டாக்டர் இராம மோகன ராவ், சுகாதாரத்துறை முன்னாள் செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மீது அரசு விசாரணைக்கு உத்தரவிட பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் தமிழக சட்டசபைக் கூட்டத்தொடரில் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அடுக்கடுக்காக பல்வேறு பகீர் தகவல்கள் வெளியாகின.
7 பேர் காரணம்
ஜெயலலிதா வெளிநாடு சிகிச்சைக்கு அழைத்து செல்லப்படாததற்கு 7 பேர் காரணம் எனவும், ஜெயலலிதாவை வெளிநாடு அழைத்துச் செல்ல அப்பல்லோ மருத்துவமனை எதிராக இருந்தது என குற்றம் சாட்டப்பட்டது. முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் , சசிகலாவின் உறவினர் டாக்டர் சிவகுமாரும் ஜெயலலிதாவிற்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிப்பதற்கு எதிராக இருந்தனர் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது.
ரத்த வெள்ளம்
டிசம்பர் 4ஆம் தேதி அப்போது தலைமைச் செயலாளராக இருந்த ராமமோகன் ராவ் மருத்துவமனைக்கு சென்றபோது ஜெயலலிதாவுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதாகவும் மாரடைப்பு ஏற்பட்டதாகவும் தன்னிடம் தெரிவிக்கப்பட்டதாக கூறியிருக்கிறார். உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் தன்னிடம் மருத்துவர்கள் கூறியதாக தெரிவித்ததோடு, வார்டில் சென்று பார்த்த போது ஜெயலலிதா ரத்த வெள்ளத்தில் மூழ்கி இருப்பதை கண்டு தான் பெரும் அதிர்ச்சி அடைந்ததாக கூறியது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
ஜெயலலிதா கொலை
இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை கொன்றது மோடிதான் என விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ மார்கண்டேயன் குற்றம்சாட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பெரியசாமிபுரம் கிராமத்தில், திமுக சார்பில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு மாபெரும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், திமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
மார்க்கண்டேயன்
இக்கூட்டத்தில் பொதுமக்களிடம் பேசிய விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருக்கும் வரை அந்தக் கட்சியில் (அதிமுக) இருந்தேன்... ஜெயலலிதா இறந்துவிட்டார்.. அவரை மோடிதான் கொன்றுவிட்டார்.. காரணம் பிரதமர் வேட்பாளராக நிற்க போவதாக கூறியதால் பிஜேபி-தான் கொன்றுவிட்டது. இதனை பகிரங்கமாக தான் குற்றாட்டுகிறோம். பிரதமர் தேர்தலில் தங்களுக்கு போட்டியாக வந்து விடக் கூடாது என்பதற்காக பாஜகதான் இதனை செய்தது என பேசியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.