தூத்துக்குடியிலேயே முகாம்.. அள்ளிக் கொடுத்த கனிமொழி.. உருகிப்போன தூய்மை பணியாளர்கள்
தூத்துக்குடி: தூய்மை பணியாளர்களுக்கு மூட்டை மூட்டையாக நிவாரண பொருட்களை வழங்கியுள்ளார் திமுக எம்.பி. கனிமொழி.
Recommended Video
மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் 18 பேர் கரும் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் கனிமொழி தெரிவித்தார்.
கொரோனா 2வது அலை பரவிய காலகட்டத்தில், தூத்துக்குடி தொகுதியிலேயே முகாமிட்டு மக்களை காக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார் திமுக லோக்சபா எம்பி கனிமொழி.
மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டம் - அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு
இப்படித்தான் இன்றும், தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளருக்கு கொரோனா நிவாரண பொருட்களை கனிமொழி எம்பி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் வழங்கினார்கள்.
தூய்மை பணியாளர்கள்
கொரோனா தொற்று காரணமாக தமிழக முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இன்று முதல் ஜூன் 14 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் பணியாற்றக்கூடிய சுமார் 120 தூய்மை பணியாளர்களுக்கு அரிசி மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.
அரிசி, மளிகை பொருட்கள்
பாராளுமன்ற திமுக குழு துணைத் தலைவரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்பி, மீன் வளம் மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு அரிசி மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகளை வழங்கினார்கள். ஊரடங்கு காலத்தில் இந்த உதவி பெரும்ஆறுதல் அளிப்பதாக அவர்கள் உருக்கமாக தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ், தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய தலைவர் பசுபதி அம்பாசங்கர் மாப்பிள்ளையூரணி ஊராட்சி தலைவர் சரவணகுமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடியில் தடுப்பூசி
இதைத்தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய கனிமொழி எம்பி, தூத்துக்குடி மாவட்டத்தில் பெருமளவில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசிகள் கிராமப்புறங்களிலும் போடப்பட்டு வருகின்றன. இதுவரை தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். மருத்துவ ஊழியர்கள் அதுபோல் முன் களப்பணியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு 80 சதவீதம் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
கருப்பு பூஞ்சை பாதிப்பு
மத்திய அரசிடமிருந்து வரவேண்டிய தடுப்பூசிகள் இன்னும் வரததால் பல மாவட்டங்களில் வேண்டிய அளவிற்கு தடுப்பூசி போட முடியாத நிலை உள்ளது. மாவட்டத்தில் 18 பேர் கரும்பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 6 பேர் நோய் தொற்று இருக்கும் என சந்தேகம் உள்ளது அவர்களுக்கு உரிய சிகிச்சை என்பது அளிக்கப்பட்டு வருகிறது, என தெரிவித்தார்.
புதுப் புது திட்டங்கள்
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி எம்பி, திமுக ஆட்சி பதவியேற்று இன்றுடன் ஒருமாதம் ஆகிறது, இந்த ஒரு மாத காலத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்கள் பயன்பெறும் வகையிலான திட்டங்களை செயல்படுத்தி மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தினம்தினம் ஒரு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
பணம் கொடுத்து பாதுகாப்பு
இந்த கொரோனா காலத்தில் மக்களைப் பாதுகாக்கும் பணிகளில் தீவிரமாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார் இதன் விளைவாக தற்போது கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது சென்ற அதிமுக ஆட்சியில் கொரோனா பாதுகாப்பு திட்டங்கள் முறையாக செயல்படுத்தாத நிலையில் தமிழக முதல்வராக முகஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு மக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். அது மட்டுமின்றி கொரோனா காலத்தில் மக்கள் பாதிக்காத வகையில் 4000 ரூபாய் வழங்கியும் மக்களை பாதுகாத்து வருகிறார்.
நீட் தேர்வு
அனைவரும் சொல்வது போல், தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இல்லாத சூழல் ஏற்ப்பட்டுள்ளது. நீட் தேர்வு ரத்து செய்வது குறித்து குழு அமைத்து முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். எம்பிக்கள் எல்லாம் நேரில் சென்று வலியுறுத்த வேண்டும் என முதல்வர் கேட்டுக்கொண்டால் நிச்சயம் செல்வோம் என தெரிவித்தார்.