எழுதி கொடுத்திட்டு போங்க! நிறைமாத கர்ப்பிணிக்கே இந்த நிலையா? திருச்செந்தூரில் கொந்தளித்த உறவினர்கள்!
தூத்துக்குடி : மத்திய அரசு விருது பெற்ற திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணுக்கு உரிய சிகிச்சை அளிக்காமல் அலைகழித்ததால் கர்ப்பிணி பெண் பிரசவ வலி உடன் நடந்து தனியார் மருத்துவமனைக்கு சென்ற அவலம் சமூக வலைதளங்களில் கண்டனத்தை பெற்றுள்ளது.
திருச்செந்தூர் அருகே உள்ள உமரிகாட்டைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணியான துர்கா (22). பிரசவத்திற்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் இன்று துர்காவை தனியார் ஸ்கேன் சென்டரில் ஸ்கேன் எடுத்துவிட்டு வர மருத்துவர் சியாமளா தெரிவித்துள்ளார். இதனால் துர்கா பிரசவ வலியுடன் ஸ்கேன் எடுத்துவிட்டு மருத்துவமனை வந்துள்ளார்.

கர்ப்பிணி பெண்
அங்கு மருத்துவர் ஒரு மணி நேரத்தில் உங்களுக்கு குழந்தை பிறந்து விடும் நீங்கள் தூத்துக்குடி செல்லுங்கள் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் மருத்துவமனை செல்லும் வழியில் ஏதாவது நேர்ந்தால் மருத்துவமனை மற்றும் மருத்துவர்கள் பொறுப்பல்ல என எழுதி தந்து விட்டு செல்லும்படி தெரிவித்துள்ளனர்.

அவலம்
ஒரு மணி நேரத்தில் தூத்துக்குடி செல்ல இடையில் ஏதும் நேர்ந்தால் என்ன செய்ய என அச்சமடைந்த துர்கா திருச்செந்தூர் அரசு மருத்துவமனையின் பிரசவ வார்டிலிருந்து பிரசவவலியுடன் வெளியேறி நடந்து மருத்துவமனைக்கு வெளியே வந்து ஆட்டோ மூலம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார்.

வேதனை
நிறைமாத கர்ப்பிணி பெண்ணுக்கு உரிய சிகிச்சை அளித்து உரிய நேரத்தில் அவரை மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி மருத்துவமனைக்கு அனுப்பாமல் பிரசவ வலியுடன் இருந்த கர்ப்பிணி பெண் மருத்துவமனை விட்டு வெளியேறி நடந்து செல்ல முடியாமல் ஆங்காங்கே நின்று கொண்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக சென்ற சம்பவம் பொது மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

நடவடிக்கை வேண்டும்
மேலும் அந்தப் பெண்ணுக்கு தனியார் மருத்துவமனை செல்வதற்கு ஆம்புலன்ஸ் வசதியும் செய்து கொடுக்காத மருத்துவமனை மருத்துவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் இது போன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். திருச்செந்தூர் அரசு மருத்துவமனை நோயாளிகளை தரமாக கையாளும் மருத்துவமனைக்கான மத்திய அரசின் விருது கடந்த சில தினங்களுக்கு முன்பு கொடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications