பணப்பட்டுவாடா புகார்.. பறக்கும் படையினர் சோதனை நடத்திய தூத்துக்குடி ரிசார்ட்டுக்கு ஸ்டாலின் வருகை
தூத்துக்குடி: பணப்பட்டுவாடா புகாரை அடுத்து தூத்துக்குடியில் சோதனை நடத்தப்பட்ட சத்யா ரிசார்ட்டுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வருகை தந்தார்.
தூத்துக்குடியில் ஒட்டப்பிடாரம் சட்டசபை தொகுதி திமுக வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து இன்று ஸ்டாலின் பிரசாரம் செய்யவிருந்தார். இதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி சென்றார்.

அங்கு அவர் தங்குவதற்காக கோரம்பள்ளத்தில் உள்ள சத்யா ரிசார்ட்டில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த நிலையில் தூத்துக்குடியில் முக ஸ்டாலின் தங்க உள்ள விடுதியில் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர்.
இந்த நிலையில் தூத்துக்குடியில் நடைப்பயணமாக பொதுமக்களிடம் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். அவரிடம் பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவித்தனர். இதையடுத்து சோதனை நடந்து முடிந்த சத்யா ரிசார்ட்டுக்கு ஸ்டாலின் வந்தார்.
பணப்பட்டுவாடா புகாரால் விடுதியில் உள்ள அரசியல் பிரமுகர்களின் வாகனங்களையும் அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். தேர்தல் நடத்தை விதிகள் வரும் 27-ஆம் தேதி வரை அமலில் உள்ளதாக தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் வரும் 19-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுவதால் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். லோக்சபா தேர்தலுக்கு முன்பு, திமுக பொருளாளர் துரைமுருகன் வீடு, அனிதா ராதாகிருஷ்ணன் வீடு, தூத்துக்குடியில் கனிமொழி தங்கியிருந்த வீடு ஆகியவற்றில் சோதனை நடந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications