தற்காலிகமாக தப்பிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் 'தலை'- அமலாக்கத்துறை வழக்கு அக்.11-க்கு ஒத்திவைப்பு!
தூத்துக்குடி: தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கில் தம்மை சேர்க்க அனுமதி கோரிய அமலாக்கத்துறை மனு மீதான விசாரணை அக்டோபர் 11-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முந்தைய 2006-11ம் ஆண்டு திமுக ஆட்சியில், அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்ய போராடிப் பார்த்தார் அனிதா ராதாகிருஷ்ணன். ஆனால் எதுவும் அவருக்கு சாதகமாக இல்லை. இதனையடுத்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சொத்து குவிப்பு வழக்கை தூத்துக்குடி நீதிமன்றத்தில் எதிர்கொண்டு வருகிறார்.

இதனிடையே 2020-ம் ஆண்டு அனிதா ராதாகிருஷ்ணன் மீது பண மோசடி வழக்கைப் போட்டது அமலாக்கத்துறை. பின்னர் 2022-ல் அனிதா ராதாகிருஷ்ணனின் ரூ6.5 கோடி சொத்துகளையும் அமலாக்கத்துறை முடக்கியது.
மேலும் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தம்மையும் இணைக்க நீதிமன்றத்தில் அனுமதி கோரியது அமலாக்கத்துறை. அனிதா ராதாகிருஷ்ணன் தற்போது அமைச்சர் என்பதால் வழக்கு விசாரணைக்கு உதவ அமலாக்கத்துறையையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என கோரப்பட்டது.
இம்னுவை ஏற்றுக் கொண்ட தூத்துக்குடி நீதிமன்றம், கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டிருந்தது. இதனடிப்படையில் அமலாக்கத்துறை ஆவணங்களைத் தாக்கல் செய்து வாதங்களை முன்வைத்தது. இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் அமலாக்கத்துறை மனு மீதான தீர்ப்பு இன்று வழங்கப்படும் என எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் இன்றும் வழக்கு விசாரணை அக்டோபர் 11-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனால் அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பு சற்று நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளது.












Click it and Unblock the Notifications