‛‛அண்ணே அந்த பணப்பை’’.. புத்தகத்தோடு ரூ.20,000யை திரும்ப வாங்கிய அண்ணாமலை! சலூனில் சிரிப்பலை
தூத்துக்குடி: தூத்துக்குடியில் பிரதமர் மோடியால் பாராட்டப்பட்ட சலூன் கடைக்காரருக்கு புதிதாக சேர் வாங்க பாஜக சார்பில் ரூ.20 ஆயிரம் வழங்கப்பட்டது. இந்த வேளையில் சலூன் கடைக்காரர் வழங்கிய புத்தகத்துடன் அண்ணாமலை தான் வழங்கிய ரூ.20 ஆயிரம் அடங்கிய கவரையும் வாங்கி வைத்து கொண்டது அனைவரையும் சிரிக்க வைத்தது.
தமிழகத்தில் பாஜகவின் கட்டமைப்பை வலுப்படுத்தும் முனைப்பில் அதன் மாநில தலைவர் அண்ணாமலை ‛என் மண்; என் மக்கள்' என்ற பெயரில் நடைப்பயணத்தை தொடங்கி உள்ளார். கடந்த மாதம் இறுதியில் ராமநாதபுரத்தில் இந்த நடைப்பயணத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார்.

இந்த நடைப்பயணம் மூலம் மாநிலம் முழுவதும் அண்ணாமலை செல்ல உள்ளார். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த நடைப்பயணம் என்பது பாஜகவுக்கு நிச்சயம் கூடுதல் ஓட்டுகளை பெற்று கொடுக்கும் என அந்த கட்சியின் தலைவர்கள் நம்புகின்றனர்.
தற்போது அண்ணாமலையின் நடைப்பயணம் என்பது ராமநாதபுரம், சிவங்கை, மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் நடந்து முடிந்துள்ளது. நேற்று(ஞாயிற்றுக்கிழமை) முதல் தூத்துக்குடி மாவட்டத்தில் ‛என் மண்; என் மக்கள்' பாதயாத்திரையை அண்ணாமலை தூத்துக்குடியில் தொடங்கினார். இந்த வேளையில் தூத்துக்குடி மில்லர்புரத்தில் அமைந்துள்ள பொன் மாரியப்பன் என்பவரின் சலூன் கடைக்கு சென்றார். இவர் சலூன் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்காக 1000க்கும் அதிகமான புத்தகங்களுடன் மினி நூலகத்தை அமைத்துள்ளார்.
பொன் மாரியப்பனை பிரதமர் நரேந்திர மோடி தனது மனதின் குரல் நிகழ்ச்சியின் குறிப்பிட்டு பேசி பாராட்டு தெரிவித்து இருந்த நிலையில் இன்று அண்ணாமலை பொன் மாரியப்பன் சலூன் கடைக்கு சென்றார். அப்போது வாடிக்கையாளர்களுக்காக நூலகம் அமைத்து இருப்பதை அவர் பாராட்டினார். மேலும் சென்னையில் உள்ள தனது வீட்டில் இருந்து 100 புத்தகங்களை அன்பளிப்பாக சலூனுக்கு வழங்குவதாக அவர் தெரிவித்தார்.
மேலும் கடையில் இருந்த சேர் பழையதாக காட்சியளித்தது. இதுபற்றி அண்ணாமலை கேட்டதற்கு, பொன் மாரியப்பன், ‛‛தனது வருமானத்தை புத்தகம் வாங்க செலவு செய்கிறேன். இதனால் புதிதாக இருக்கை வாங்க முடியவில்லை'' என்றார். இதையடுத்து தமிழக பாஜக சார்பில் ஹைடெக் சேர் வாங்க பொன் மாரியப்பனுக்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்பட்டது. இந்த பணம் ஒரு கவரில் வைத்து அவரிடம் அண்ணாமலை வழங்கினார். அதனை பொன் மாரியப்பன் பெற்று கொண்டார்.
இதையடுத்து பொன் மாரியப்பன், அண்ணாமலைக்கு புத்தகம் ஒன்றை பரிசாக வழங்கினார். அதனை அண்ணாமலை பெற்று கொண்டார். இந்த வேளையில் புத்தகத்தோடு, ரூ.20 ஆயிரம் அடங்கிய கவரையும் பொன் மாரியப்பன் வைத்திருந்தார். இதனை கவனிக்காத அண்ணாமலை புத்தகம் + ரூ.20 ஆயிரம் கவரை பெற்று கொண்டார். அப்போது பொன் மாரியப்பன் சிரித்தபடி ‛அண்ணா.. பணகவர்' எனும் வகையில் கூறவே சுதாரித்த அண்ணாலை ரூ.20 ஆயிரம் அடங்கிய கவரை மீண்டும் அவரிடம் வழங்கியதோடு அவரை ஆரத்தழுவினார். இந்த சம்பவம் என்பது அங்கிருந்த அனைவருக்கும் சிரிப்பலையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications