புகைப்படக் கலைஞர் டூ காவி உடை சுவாமி - விளாத்திகுளத்தை கலக்கிய போலி சாமியார் கைது
தூத்துக்குடி: புகைப்படக் கலைஞரிலிருந்து சுவாமிகளாக மாறி விளாத்திகுளத்தை கலக்கிய போலிச்சாமியார் கைது செய்யப்பட்டார். பரிகார பூஜை நடத்துவதாக கூறி பெண்ணிடம் நகை, பணம் பறித்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளத்தைச் சேர்ந்த கணேசன் மகன் சக்தி (37) என்பவர் விளாத்திக்குளம் - மதுரை சாலையில் 'சக்தி வாராகி" என்ற பெயரில் ஜோதிட நிலையம் வைத்து காவி உடையணிந்து பல வித பூஜைகள் நடத்தி வருகிறார்.
மேலும் வட்ட வடிவில் கோடுகள் போட்டு அதற்கு மத்தியில் பெரிய அண்டாவில் தண்ணீர் வைத்து அதில் அமர்ந்து கொண்டு தியானம் செய்து பொதுமக்கள் மத்தியில் தன்னை சக்தி வாய்ந்த ஒரு சாமியார் போல காண்பித்துக் கொண்டு ஜோதிடம் மற்றும் குறி பார்க்கும் தொழில் செய்து வந்துள்ளார்.

குறி கேட்டு பரிகாரம்
இவரை சக்தி வாய்ந்த சாமியார் என்று நினைத்து, இவரிடம் குறி கேட்டு தன்னுடைய குடும்பப் பிரச்சனைகளை பரிகாரம் செய்து தீர்த்துக் கொள்ள நிறைய பேர் அவரை அணுகிறார்கள். அந்த வகையில் விளாத்திகுளம் அருகே உள்ள கரிசல்குளத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவரது மனைவி தங்கபேச்சியம்மாள் (52) கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சக்தியின் ஜோதிட நிலையம் சென்று குறி கேட்டுள்ளார்.

வீட்டை இடித்து
அப்போது சக்தி அந்தப் பெண்ணிடம், இறந்து போன உன் கணவரின் ஆத்மா சாந்தியடையவில்லை, உனது வீட்டை இடித்து மாற்றியமைத்தால்தான் உன் கணவர் ஆத்மா சாந்தியடையும். உனது குடும்பப் பிரச்சனை தீரும் என்று கூறியுள்ளார்.

சாமியார்
அதற்கு அப்பெண் தன்னிடம் பணம் இல்லை என்று கூற, இந்த போலி சாமியார் அந்தப் பெண்ணிடமிருந்து இரண்டரை பவுன் தங்கச் செயினை பெற்றுக் கொண்டு ரூ.30 ஆயிரம் கொடுத்து வீட்டை இடிக்கச்சொல்லி உள்ளார். அந்தப் பெண்ணும் அவர் கூறியவாறே வீட்டை இடித்துள்ளார். அதன் பின்னும் அவரது குடும்பப் பிரச்சனைகள் தீரவில்லை என்று அப்பெண் மீண்டும் இந்த போலி சாமியாரிடம் சென்று கேட்டிருக்கிறார்.

உருக்கி தங்கம்
அப்போது அவர் இந்தப் பெண்ணிடம் உனது தாலி, மோதிரம் ஆகியவற்றை உருக்கி தங்கமாகவும், பணம் ரூபாய் 3500ம் கொண்டு வா, அதில் நான் தாயத்து செய்து, அதை பூஜையில் வைத்து தருகிறேன் உனது பிரச்சனைகள் தீர்ந்து விடும் என்று கூறியுள்ளார். இதனை நம்பி அந்தப் பெண்ணும் 7 கிராம் தங்கத்தை உருக்கி அவரிடம் பணத்துடன் கொடுத்துள்ளார்.

7 பவுன்
ஆனால் அவர் இதுவரை தாயத்தும் கொடுக்கவில்லை. அந்த 7 கிராம் தங்கம் மற்றும் பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை. அதைக் கேட்ட அந்தப் பெண்ணிடம், உனக்கு செய்வினை வைத்து கை, கால்களை விளங்காமல் செய்து விடுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் , விளாத்திக்குளம் காவல் துணை கண்காணிப்பாளரை உடனடியாக விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

போலீஸில் புகார்
அதன்பேரில் விளாத்திக்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் மேற்பார்வையில் விளாத்திக்குளம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் கலா தலைமையில் உதவி ஆய்வாளர் தேவராஜ் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு மேற்படி போலி சாமியார் சக்தி என்பவரை கைது செய்தனர். மேலும் இது போன்று எத்தனை பேரை மோசடி செய்துள்ளார் என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெண் பிரச்சினை
கைது செய்யப்பட்டுள்ள சக்தி ஏற்கெனவே இது போன்று பெண் பிரச்சினையில் சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விபரம் அறியாத பெண்களை ஜோதிடம் என்ற பெயரில் ஏமாற்றுவது, பெண்களை வசியம் செய்து தருகிறேன் என்ற பெயரில் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை பணத்தினை கறந்துள்ளார். ஆனால் வெளியே சொன்னால் தங்களுக்கு அசிங்கம் என்று நினைத்து பலரும் புகார் கொடுக்க முன்வரவில்லை என்கின்றனர் போலீசார்.

போலி சாமியார்கள் நம்பி ஏமாற வேண்டாம்
இதுபோன்று போலி சாமியார்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும், போலி சாமியார் சக்தியினால் பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாக புகார் கொடுக்க முன் வர வேண்டும், புகார் கொடுத்தால் போலீசார் தக்க நடவடிக்கை எடுப்பார்கள் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். நாட்டில் போலி சாமியார்களுக்கு பஞ்சமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. பிறக்கும் போது தலையில் என்ன எழுதப்பட்டதோ அதுதான் நடக்கும் என்பதை மக்கள் ஏனோ மறந்துவிடுகிறார்கள். கடவுளிடம் குறைகளை முறையிடாமல் இது போன்ற போலி சாமியார்களிடம் செல்வதால் நகை, பணம், மானம் ஆகியவற்றை இழக்க நேரிடுகிறது.












Click it and Unblock the Notifications