முருகா இதுவும் உன் திருவிளையாடலா? திடீரென உள்வாங்கிய கடல்! வெளியில் தெரிந்த நந்தி.. பறந்த கோரிக்கை
தூத்துக்குடி: திருச்செந்தூரில் கடலில் அடிக்கடி கடல் உள்வாங்கும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட சுமார் 50 அடி உள்வாங்கி காணப்பட்டது திருச்செந்தூர் கடல் பகுதி. இந்நிலையில் உள்வாங்கிய பகுதியில் சேதமடைந்த நிலையில் சிலைகள் காணப்படும் நிலையில், கந்தசஷ்டி விழாவிற்கு முன்பு சிலைகளை அகற்ற வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அறுபடை வீடுகளில், இரண்டாம் படைவீடான, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முருகனை வழிபடுவதன் மூலம், திருமண தடை நீங்கும், தொழில் அபிவிருத்தி அடையும் என்பது நம்பிக்கை.

மேலும், தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் போன்ற முருகனுக்கு உகந்த நாட்களில் விரதமிருந்து திருச்செந்தூர் முருகப் பெருமானை தரிசித்து விட்டு மீன் சமைத்து சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்யும் சிறப்பு வழக்கமும் இந்த தலத்தின் தனிச் சிறப்பு.
கடந்த பல ஆண்டுகளாகவே திருசெந்தூர் முருகப் பெருமானின் புகழ் பரவ பரவ, கோவிலுக்கு தினமும் வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. கடலா கடல் அலையா என தெரியாத அளவுக்கு மக்கள் வெள்ளம் திருச்செந்தூர் நோக்கி அணி அணியாக செல்கிறது. அதிலும், தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற முருகனுக்கு உகந்த நாட்களோடு சூரசம்காரத்தின் போதும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் முருகப்பெருமானை தரிசிக்க வருவர். அது மட்டுமல்ல சுப முகூர்த்த தினங்களில் நூற்றுக்கணக்கான திருமணங்களும் இங்கு நடப்பது வழக்கம்.
இந்த திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் முன்புள்ள கடற்கரையில் அமாவாசை பௌர்ணமி தினங்களில் கடல் உள்வாங்கி காணப்படுவது வழக்கம். ஆனால் வருகின்ற இன்று அமாவாசை தினம் வந்துள்ளது. இந்த நிலையில் அமாவாசைக்கு முன்பாக மூன்று தினங்களுக்கு முன்பு திருச்செந்தூரில் கடல் உள்வாங்கி காணப்பட்டது.
கடந்த 28ஆம் தேதி திருச்செந்தூர் கடல் பகுதி சுமார் 50 அடி வரை கடல் உள்வாங்கி காணப்பட்டது. இதனால் திருச்செந்தூர் கடற்கரை நாழிக்கிணறு பகுதியில் இருந்து அய்யா கோவில் வரை கடல் உள்வாங்கி காணப்பட்டது. அப்போது திருச்செந்தூர் கோவிலுக்கு வருகை தந்த பக்தர்கள் கடல் உள் வாங்கிய பகுதிகளில் தெரியும் பாசி படிந்த பாறைகள் மேல் ஏறி எந்தவித அச்சமுமின்றி செல்பி எடுத்தனர்.
இதற்கிடையில் கடல் உள்வாங்கி காணப்படுவதால் கடலில் வீசிச் சென்ற சேதமடைந்த சிலைகள் வெளியே தெரிகின்றன. அதில் நந்தி சிலைகள் உள்பட பல்வேறு சிலைகள் வெளியே தெரிந்தது. இந்நிலையில் வருகின்ற நவம்பர் 2ஆம் தேதி உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவில்ன் கந்த சஷ்டி விழா தொடங்க உள்ளது. மேலும் சஷ்டியின் சிகர நிகழ்ச்சியாக 7ஆம் தேதி சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது.
இந்த சமயங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தருவார்கள். அப்படி வருகை தரும் பக்தர்கள் கடலில் நீராடும் போது கால்களில் சிலைகள் தட்டி விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே இந்த கந்தசஷ்டி திருவிழாவிற்கு முன்பு இந்த சிலைகள் அனைத்தையும் அப்புறப்படுத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கடல் உள்வாங்கி காணப்படும் நாட்களில் பாசி படிந்த பாறைகளில் பக்தர்கள் செல்பி எடுப்பது ஆபத்தானதாக உள்ள நிலையில், அதனையும் கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications