துடி துடித்த தூத்துக்குடி.. குடும்ப கவுரவத்துக்காக நடந்த கொடூரம்! 19 வயது இளம்பெண் ஆணவக்கொலை!
தூத்துக்குடி: கயத்தாறு பகுதியில், வேறு சமூகத்தை சேர்ந்தவரை காதலித்து கைவிட மறுத்ததால் பெற்ற மகளை தாய் தனது மகனுடன் சேர்ந்து கொலை செய்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கோவில்பட்டி அருகே கயத்தார் தாலுகா, தெற்கு மயிலோடை அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்வம். இவருடைய மகள் அபிசெல்வி (19). இவர் கடந்த 3 வருடங்களாக சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் மூலம் சேலத்தைச் சேர்ந்த ஹரி பிரசாத் என்ற வாலிபரைத் தீவிரமாகக் காதலித்து வந்துள்ளார்.

காதல் விவகாரம்
இவர்களது காதல் விவகாரம் கடந்த 2 வருடங்களுக்கு முன்பே குடும்பத்தினருக்குத் தெரியவந்துள்ளது. அப்போது அபிசெல்வியின் அண்ணன் சிவஞானம் மற்றும் பெற்றோர் இக்காதலை வன்மையாகக் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த அபிசெல்வி, 2 வருடங்களுக்கு முன்பே வீட்டின் மாடியில் இருந்து கீழே குதித்துத் தற்கொலை முயற்சி ஈடுப்பட்டுள்ளார். ஆனால், நல்வாய்ப்பாக குடும்பத்தினர் அவரை மீட்டு சரியான நேரத்தில் மருத்துவமனையில் அனுமதித்ததால், அவர் உயிர் பிழைத்தார்.
குடும்பத்தின் கவுரவம்
இருப்பினும் குடும்பத்தின் கவுரவம்தான் பெருசு என்றும், எனவே காதல் எல்லாம் வேண்டாம் விட்டுவிடு என்று தொடர்ந்து அறிவுரை கூறி வந்திருக்கின்றனர்.
இப்படியாக குடும்பத்தினர் தடுத்த போதிலும், அபிசெல்வி தொடர்ந்து சேலத்தைச் சேர்ந்த வாலிபருடன் இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து வந்திருக்கிறார்.
இந்தச் சூழலில், நேற்று முன்தினம் அவர் தொடர்ந்து பேசி வந்ததை அவரது அண்ணன் சிவஞானம் நேரில் பார்த்துக் கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில், அண்ணன் சிவஞானம் தங்கை அபிசெல்வியை அடித்துக் கண்டித்ததாகக் கூறப்படுகிறது.
பெற்றோர் சொன்ன கதை
இதனால் கடும் கோபமும் ஆத்திரமும் அடைந்த அபிசெல்வி, தனது வீட்டில் இருந்த கெமிக்கல் பொடியைத் தண்ணீரில் கலந்து குடித்ததாகவும், அதுமட்டுமின்றி, கடுமையான மன உளைச்சலில் வீட்டின் அறைக்குள் சென்ற அவர், அங்கிருந்த சீலிங் பேனில் தனது சேலையால் தூக்குப்போட்டுக் தற்கொலை செய்து கொண்டதாக அந்தப் பெண்ணின் தாய் மற்றும் அண்ணன் தெரிவித்தனர்.
விசாரணையை தீவிரப்படுத்திய போலீஸ்
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து விரைந்து வந்த கயத்தார் போலீசார், அபிசெல்வியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையில் உடற்கூறாய்வு அறிக்கையின்படி, அபிசெல்வியின் உடலில் அவர் தாக்கப்பட்டதற்கான காயங்கள் இருந்தது தெரிய வந்ததுள்ளது. இதையடுத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
வெளிவந்த அதிர்ச்சி உண்மை
தொடர் விசாரணையில் அபிச்செல்வியை, அவரது சகோதரர் சிவஞானம் கொலை செய்ததும் அதற்கு அவரது தாய் எஸ்தர்பாலின் உடந்தையாக இருந்ததும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து கயத்தாறு போலீசார் இருவரையும் கைது செய்துள்ளனர்.
சொந்த குடும்பத்தின் கவுரவம்தான் முக்கியம் என்று, அதற்காக பெற்ற மகள்/சகோதரி என்றும் பாராமல் தாயும், மகனும் சேர்ந்து கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.












Click it and Unblock the Notifications