பாஜக மீண்டும் வந்தால் இன்றைய இந்தியா இருக்காது.. ஈவெ ராமசாமி ராஜ்ஜியம் அமைப்போம்: கனிமொழி அதிரடி!
தூத்துக்குடி: மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இன்று நாம் பார்க்கும் இந்தியா இல்லாமல் போய்விடும்; இந்தியா முழுவதும் ஈவெ ராமசாமி ராஜ்ஜியத்தை உருவாக்குவோம் என திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கனிமொழி எம்பி பேசியதாவது: ஆட்சி மாற்றம் இந்த நாட்டில் வரவில்லை என்றால் பாஜகவை வீட்டுக்கு அனுப்பிவிட்டு ஒரு நல்லாட்சியை நாம் தேசிய அளவில் உருவாக்கவில்லை என்றால் இன்று நாம் பார்க்கக் கூடிய இந்தியா என்பது இல்லாமல் போய்விடும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்துக்களை கேடயமாக... :மத்தியில் இருக்கக் கூடிய ஆட்சி என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒன்றியத்தில் இருக்கக் கூடிய பாஜக, தொடர்ந்து மக்களை பிரித்தாள்கிறது. அவங்க சொல்றாங்களே.. இந்துக்களை, இந்து மதத்தைப் பாதுகாத்துக் கொண்டிருக்கக் கூடியவர்கள் நாங்கள்தான் என்கிறார்கள். இங்கே இருக்கும் மக்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் இந்துக்களை பாதுகாக்கவில்லை. இந்துக்களை தங்களுக்கான அரசியல் கேடயமாக அவர்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தன்னுடைய அரசியலுக்கான ஆயுதமாக அவர்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

மக்கள் விரோத, மாநில உரிமைகள் பறிப்பு சட்டங்கள்: மக்களுக்காக பெரும்பான்மையாக இருக்கக் கூடிய இந்து மக்களுக்காக இந்த ஆட்சி என்ன செய்திருக்கிறது? என்று சிந்தித்து பாருங்கள். இந்த நாட்டிலே இருக்கக் கூடிய, சாதாரண சாமானிய அடித்தட்டு மக்களுக்கு என்ன செய்திருக்கிறது பாஜக ஆட்சி? அடித்தட்டு மக்களுக்கு எதிரான சட்டங்களை கொண்டு வந்திருக்கிறார்கள். ஒவ்வொரு சட்டமும் சாதாரண மக்களுக்கு எதிரான சட்டம். அதே நேரத்தில் மாநில உரிமைகளுக்கு எதிரான சட்டம். எந்த சட்டத்தை எடுத்துக் கொண்டாலும் மாநில உரிமைகளை கொஞ்சம் கொஞ்சமாக பறிக்கக் கூடிய சட்டங்கள். கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் புதிய சட்டங்கள், சட்ட மாற்றங்களைக் கொண்டு வந்தார்கள். அந்த சட்ட மாற்றங்களின் பெயர்கள் இந்தியில்தான் இருக்கிறது. அது என்ன சட்டம்? என்ன மாற்றினார்கள் என்பது யாருக்குமே தெரியாது. அப்படிப்பட்ட ஒரு சூழலிலே யாரும் இவர்களை எதிர்த்து யாரும் கேள்வி கேட்கக் கூடாது. இந்த நாட்டிலே இவர்களை யாரும் எதிர்த்து கேள்வி கேட்கக் கூடாது. கேள்வி கேட்கக் கூடிய ஊடகங்களாக இருக்கட்டும். எழுத்தாளர்களாக, சிந்தனையாளர்களாக இருந்தாலும் எத்தனை பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என கணக்கிட்டுச் சொல்ல முடியாது. அந்த அளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஈவெ ராமசாமி ராஜ்ஜியம்: மத்தியில், தேசிய அளவில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஒடுக்கப்பட்டவர்கள் மேலும் ஒடுக்கப்படுவார்கள் என்கிற நிலைமைதான் உருவாகும். பாஜக உருவாக்க நினைக்கும் ராம ராஜ்ஜியம் என்பது யாருக்கும் எந்த உரிமையும் அற்ற ஒரு ராம ராஜ்ஜியம், அது மோடி ராஜ்ஜியம், ஆர்எஸ்எஸ் ராஜ்ஜியம். ஆனால் தமிழ்நாட்டில் இருக்கும் நமது கனவு, ராமசாமி ராஜ்ஜியம், ஈவெ ராமசாமி ராஜ்ஜியம். அந்த ராஜ்யத்தை நாடு முழுவதும் உருவாக்கிக் காட்டுவோம். அதுவே இந்தியா கூட்டணியின் வெற்றியாக இருக்கும். இவ்வாறு கனிமொழி பேசினார்.


கனிமொழியின் இந்த பேச்சு குறித்து கருத்து தெரிவித்த பாஜகவின் நாராயணன் திருப்பதி, ராமராஜ்ஜியமும் ராமசாமி ராஜ்ஜியமும் ஒன்றுதான் என தமது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications