விஜய் வெற்றிக்கு உழைக்க போகிறேன்..தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியான ஸ்லோனினின் தாய் உருக்கம்
தூத்துக்குடி: ‛‛என் மகள் இறந்தபோது நைட்டு 11.50 மணிக்கு வந்து விஜய் ஆறுதல் கூறி துக்கத்தில் பங்கெடுத்தார். இப்போது மாற்றம் வேண்டும். இதனால் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து விஜய் வெற்றிக்காக உழைக்கப்போகிறேன்'' என்று தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 17 வயது மகள் ஸ்லோனினை இழந்த தாய் வனிதா உருக்கமாக கூறியுள்ளார்.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி உள்ளார். இந்த கட்சியின் முதல் அரசியல் மாநாடு கடந்த மாதம் 27 ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே விசாலையில் நடந்தது. இதில் நடிகர் விஜய் பங்கேற்று பேசினார். அந்த மாநாட்டில் நடிகர் விஜய் தனது கட்சியின் கொடி விளக்கம், அரசியல் கொள்கைகளை விளக்கியிருந்தார்.

மேலும் பாஜக தனது கொள்கை எதிரி எனவும், திமுக தனது அரசியல் எதிரி என்றும் வெளிப்படையாக அறிவித்தார். நடிகர் விஜய்யின் அந்த மாநாட்டில் லட்சக்கணக்கில் தொண்டர்கள், ரசிகர்கள் திரண்டனர். இதனால் தமிழக வெற்றிக் கழகத்தினர் உற்சாகமாகி வருகின்றனர்.
மேலும் மாவட்ட வாரியாக கட்சியை பலப்படுத்தும் பணியில் விஜய் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அதுமட்டுமின்றி மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும் நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் தான் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இறந்த ஸ்லோனின் என்ற 18 வயது இளம்பெண்ணின் தாய் வனிதா நடிகர் விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதுபற்றி ஸ்லோனின் தாய் வனிதா கூறியதாவது: 2018 ஸ்டெர்லைட் போராட்டத்தில் என் மகள் ஸ்லோனின் உயிரிழந்தார். அதன்பிறகு நைட்டு 11.50 மணிக்கு விஜய் நம்ம வீட்டுக்கு வந்து ஆறுதல், அனுதாபம் தெரிவித்தார். நேரம் செலவழித்து எங்களின் துக்கம், வேதனையில் பங்கெடுத்தார். ஆறுதல் கூறினார். அப்போது அவர் அரசியலில் இல்லை.
அரசியலில் இல்லாமல் ஒரு நடிகராக இருந்தபோது 7 ஆண்டுக்கு முன்பு எங்களை தேடிவந்து அனுதாபம் தெரிவித்தார். அதை எங்களால் மறக்க முடியாது. எப்போதும் நினைவில் வைத்து கொள்வேன். யாரோ எவரோ.. அவங்க ஒரு ரசிகை.. நம் வேதனை துன்பத்தை நினைத்து அங்க இருக்க வேண்டும். ஆறுதல் கூறினாரே.
அதனால் ஒரு மாற்றம் வேண்டும். வெற்றி கழகத்தில் உறுப்பினராக இருந்து வெற்றியை பெற உறுதுணையாக இருப்போம். அஜிதா ஆக்னல் வெற்றி கழகத்தில் மாவட்ட பொறுப்பாளராக உள்ளார். அந்த மகளுடன், ஒரு தாயாக உடன் சேர்ந்து விஜய்க்கு வெற்றிக்கு உழைப்போம்'' என்றார்.

கடந்த 2018-ம் ஆண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்துக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின்போது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 பேர் உயிரிழந்தனர். அதில் 17 வயது நிரம்பிய ஸ்லோனின் என்ற இளம்பெண்ணும் ஒருவர். இந்த சம்பவம் அப்போது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
ஆட்சியில் இருந்தஅதிமுக அரசை அரசியல் தலைவர்களையும் தாண்டி, திரையுலகினர், சமூகஆர்வலர்கள் என ஒருவர் விடாமல், அந்த சம்பவத்துக்கு எதிராகக் குரல்கொடுத்தனர். நடிகர்கள் விஜய், ரஜினிகாந்த் ஆகியோர் தூத்துக்குடி சென்று, பாதிக்கப்பட்டவர் களைச் சந்தித்தனர். விஜய் ஸ்லோனின் வீட்டுக்கு சென்று தாய் வனிதாவுக்கு ஆறுதல் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications