எம்.ஜி.ஆர். பாணியில் கனிமொழி! சாப்பாடு விஷயத்தில் தாராளம்! மக்களை மனம் குளிர வைத்த பின்னணி!
தூத்துக்குடி: சாப்பாடு விஷயத்தில் மறைந்த எம்.ஜி.ஆர். எந்தளவுக்கு தாராளம் காட்டினாரோ, அதேபோல் கனிமொழியும் சாப்பாடு விவகாரத்தில் கணக்கு பார்க்காமல் செலவழித்து கவனம் ஈர்த்திருக்கிறார்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு கனிமொழி எம்.பி. கடந்த 4 நாட்களாக தனது சொந்த நிதியின் மூலம் தினமும் 25,000 பேருக்கு உணவு வழங்கினார். அதே போல் சென்னை மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போதும் தனது சி.ஐ.டி. காலனி இல்லத்தில் வைத்து தினமும் டன் கணக்கில் உணவு சமைத்து மக்களுக்கு 3 வேலையும் விநியோகம் செய்தார். இத்தனைக்கும் அப்போது கனிமொழி டெல்லியில் இருந்தார். ஆனாலும் அங்கிருந்தவாறே உணவு சமைத்து விநியோகம் செய்யும் பொறுப்பை டைரக்ஷன் செய்தார்.

அதேபோல் தனது தூத்துக்குடி இல்லத்திற்கு தன்னை சந்திக்க வருபவர்களிடமும் சாப்பிட்டீர்களா என வாஞ்சையாக கேட்க ஆரம்பித்துள்ள கனிமொழி, சாப்பிடாதவர்களுக்கு அதற்கான ஏற்பாடுகளை செய்கிறார். வெள்ளப் பாதிப்பால் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தவர்களுக்கு அரசும், மாநகராட்சியும் உணவு விநியோகம் செய்த போதும் கூட அவர்களுக்கு உறுதுணையாக கனிமொழியும் தனது பங்களிப்பை இந்த பேரிடரில் செய்திருக்கிறார்.
அதேபோல் வெள்ள மீட்பு பணிகளிலும் சுணக்கமின்றி இன்னும் சுற்றி வருகிறார். ஒரு பெண்ணாக இருந்தும் டூவிலர், படகு, என துணிச்சலாக சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு மக்களுக்கு நம்பிக்கை அளித்து வருகிறார். தூத்துக்குடி மாவட்டத்தி பல இடங்களில் அமைச்சர்களிடமும், அதிகாரிகளிடமும், கோபத்தை வெளிப்படுத்திய பலர் கனிமொழியிடம் கோபத்தை வெளிப்படுத்தாது ஆச்சரியப்பட வைக்கும் ஒன்றாகும்.
தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை இப்போது இயல்பு நிலை திரும்பி வருகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் மக்களை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் கனிமொழி, வெள்ளம் பாதித்த பகுதிகளான தென் சென்னை, வட சென்னை, மத்திய சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நெல்லை பகுதிகளில் அந்தந்த தொகுதிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயல்பட்டதை காட்டிலும் சற்று கூடுதலான உழைப்பை தூத்துக்குடியில் செலுத்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications