சாத்தான்குளம் இரட்டை மரணம்.. விடாமல் விரட்டும் கனிமொழி.. முககவசத்தை கவனித்து பாருங்கள்!
தூத்துக்குடி: சாத்தான்குளத்தில் பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் மரணத்திற்கு நீதி கேட்டு தூத்துக்குடி எம்பி கனிமொழி முககவசம் மூலமும் போராட்டத்தை துவக்கி உள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் விற்பனை கடை நடத்தி வந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் ஊரடங்கு சமயத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து கடையைத் திறந்து வைத்ததால் போலீசாரால் 19ம் தேதி கைது செய்யப்பட்டனர்.
இவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்திய போலீசார் கோவில்பட்டி சிறையில் அடைத்தனர். அடைத்த அன்றே ஜெயராஜ் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் அடுத்தடுத்து மர்ம மரணம் அடைந்தனர். காவல்துறையினர் அடித்ததில் அவர்கள் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டினர். இந்த விவகாரத்தில் பல்வேறு தரப்பினரும் காவல்துறையினர் அடித்ததாலேயே உயிரிழந்ததாக குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்த பிரச்சனையில் ஆரம்பம் முதலே களம் இறங்கி நீதி கேட்டு வருகிறார் திமுக எம்பி கனிமொழி. தூத்துக்குடி லோக்சபா எம்பியான கனிமொழி, சாத்தான்குளம் கிளை சிறையில் ஜெயராஜ் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் மரணம் அடைந்த அன்றே நேரில் சென்று உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்ததுடன், தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறார்.
எல்லாத்துக்கும் காரணம் மாஜிஸ்திரேட்டுதான்.. ரத்தம் எப்படி வந்ததுன்னு கேட்டாரா.. சந்துரு கேள்வி
சமூக ஊடகங்கள் மற்றும் தேசிய அளவில் இந்த பிரச்சனை பேசும் பொருளாக மாறிவிட்ட நிலையில், கனிமொழி நூதன முறையில் போராட்டத்தை கையில் எடுத்துள்ளார். பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் மரணத்திற்கு நீதி கேட்கும் வாசகங்கள் அடங்கிய முககவசத்தை கனிமொழி எம்பி அணிந்துள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.