திருச்செந்தூர் முருகன் கோவிலில் சூப்பர் வசதி.. கந்த சஷ்டி விழாவிற்கு முன் நடந்த பெரிய நல்ல விஷயம்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ரூ.48.36 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய பக்தர்கள் தங்கும் விடுதியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த புதிய பக்தர்கள் தங்கும் விடுதியானது 2 தளங்களுடன் 99 ஆயிரத்து 925 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டிருக்கிறது. இங்கு தங்குவதற்கு 2000 ரூபாய் வாடகை ஆகும். இதற்கான முன்பதிவு தொடங்கி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உலக அளவில் புகழ் பெற்ற முருகன் கோயிலாகும்.இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வார்கள். முக்கிய விஷேச நாட்களில் பல ஆயிரம் பக்தர்கள் வந்து செல்வது வழக்கமாக உள்ளது. குறிப்பாக கந்தசஷ்டி விழா, தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் போன்ற பல்வேறு முக்கியமான நாட்களில் பக்தர்கள் மிக மிக அதிகமாக வருவார்கள். அப்படி வரும் பக்தர்கள் இரவில் தங்கி அதிகாலையில் முருகனை தரிசிப்பார்கள். சிலர் பகலில் வந்து தங்கி காலையில் முருகனை தரிசிப்பார்கள். திருச்செந்தூரை பொறுத்தவரை ஒரு இரவு தங்கி தரிசனம் செய்வதையே விஷேசமாக மக்கள் கருதுகிறார்கள். அதனால் எப்போது அறைகளுக்கு டிமாண்ட் அதிகம் ஆகும்.

இந்த சூழலில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ரூ.48.36 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய பக்தர்கள் தங்கும் விடுதியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த புதிய பக்தர்கள் தங்கும் விடுதியானது 2 தளங்களுடன் 99 ஆயிரத்து 925 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டிருக்கிறது.
அரசு அமைத்துள்ள தங்கும் விடுதியை பொறுத்தவரை குளிர்சாதன வசதிகளுடன் 100 இருவர் தங்கும் அறைகள், 9 கட்டில்கள் கொண்ட 16 அறைகள் மற்றும் 7 கட்டில்கள் கொண்ட 12 அறைகள் என 28 கூடுதல் படுக்கை அறைகள், ஹால் மற்றும் 2 படுக்கை அறைகளுடன் கூடிய 20 பக்தர்கள் தங்கும் குடில்கள், சமையல் அறையுடன் கூடிய உணவகம், ஓட்டுநர்கள் ஓய்வு அறை, வாகனங்கள் நிறுத்துமிடம், லிப்டு என அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டிருக்கிறது.
இவ்விடுதியில் ஹால் மற்றும் 2 படுக்கை அறைகளுடன் கூடிய 20 பக்தர்கள் தங்கும் குடில்கள் கோவில் நிர்வாகத்தால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. ஒரு குடிலுக்கு நாளொன்றுக்கு வாடகையாக ரூ.2 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டு கடந்த 23-ந்தேதி முதல் பக்தர்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்படுகிறது.
குளிர்சாதன வசதிகளுடன் 100 இருவர் தங்கும் அறைகள், 9 கட்டில்கள் கொண்ட 16 அறைகள் மற்றும் 7 கட்டில்கள் கொண்ட 12 அறைகள் என 28 கூடுதல் படுக்கை அறைகள் போன்றவை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தால் நடத்தப்படுகிறது. இந்நிலையில் அறைகளுக்கான முன்பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. இந்த தகவலை கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனிடையே திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்தசஷ்டி பெருவிழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு கூறினார். திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி பெருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வழக்கம். இந்தாண்டு கந்தசஷ்டி பெருவிழா நவம்பர் 2ம் தேதி தொடங்கி, நவம்பர் 7ம் தேதி சூரசம்ஹாரமும், 8ம் தேதி திருக்கல்யாணமும் நடைபெறவுள்ளது.
திருச்செந்தூரில் கந்த சஷ்டி விரதம் தொடங்கும் முதல் ஐந்து நாட்களுக்கு தினம் ஒரு லட்சம் பக்தர்களும், சூரசம்ஹார தினத்தன்று சுமார் ஆறு லட்சம் பக்தர்களும், திருக்கல்யாணத்திற்கு சுமார் இரண்டு லட்சம் பக்தர்களும் வருகை புரிவார்கள் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் திருச்செந்தூருக்கு வருகை தருவதால் அவர்களின் தேவைக்கேற்ப வாகனங்கள் நிறுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.. பக்தர்களின் பாதுகாப்பு கருதி 181 இடங்களில் சிசிடிவி கேமராக்களும், கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications