அடுத்த அதிரடி.. தூத்துக்குடியில் கனிமொழி வீட்டில் வருமான வரி சோதனை.. பரபரப்பு
Recommended Video
தூத்துக்குடி: தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி தங்கியுள்ள வீடு, மற்றும் அவரது அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி லோக்சபா தொகுதியில், திமுக சார்பில் கனிமொழி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தராஜன் களமிறங்கியுள்ளார்.

நாளை மறுநாள், தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், தூத்துக்குடியில் பணப்பட்டுவாடா தீவிரமாக நடைபெற்று வருவதாக புகார்கள் எழுந்தன. நேற்று இரவு முதலே ஓட்டுக்கு 300 ரூபாய் அளவில் பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக ஒரு தகவல் வெளியானது.
இந்த நிலையில் தூத்துக்குடி, குறிஞ்சி நகர் என்ற பகுதியில் கனிமொழி தங்கியுள்ள வீடு மற்றும் அலுவலகத்தில் இன்று இரவு 10 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.

கனிமொழியின் வீடு மற்றும் அலுவலகத்தின், உள்ளே செல்வதற்கும், உள்ளே இருந்து வெளியே செல்வதற்கும் யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. வருமான வரி சோதனை நடைபெறுவது தெரிந்ததும், திமுக நிர்வாகிகள், எம்எல்ஏக்கள் மற்றும் தொண்டர்கள் குறிஞ்சி நகரில் உள்ள வீட்டைச் சுற்றி திரண்டனர்.
எனவே கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே, வேலூரில் பணப்பட்டுவாடா புகாரைத் தொடர்ந்து லோக்சபா தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது கனிமொழியின் வீடு மற்றும் அலுவலகத்தில் அதிரடி சோதனை நடைபெறுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications