மருது பாண்டியர் போல அண்ணாமலை பிரகடனம் வெளியிட்டா ஒரே ஒரு சிரிப்பில் இப்படி சொல்லிட்டாங்களே கனிமொழி!
தூத்துக்குடி: தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால் ஶ்ரீரங்கம் பெரியார் சிலையை அகற்றுவோம் என்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சுக்கு தமக்கே உரிய பாணியில் பதிலடி தந்துள்ளார் திமுக துணைப் பொதுச்செயலாளராக கனிமொழி எம்.பி.
ஶ்ரீரங்கத்தில் நேற்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாவது: மருது சகோதரர்கள் எப்போது ஆங்கிலேயர்களை எதிர்க்க வேண்டும் என முடிவு கட்டினார்களோ அப்போது ஜம்புதீவு பிரகடனம் கொண்டு வந்து இந்த கோவில் சுவற்றில் ஒட்டினார்கள். 1801-ம் ஆண்டு ஜூன் 16-ந் தேதி ஶ்ரீரங்கம் கோவில் மதில் சுவரில் ஜம்புதீவு பிரகடனத்தை ஒட்டி ஆங்கிலேயருக்கு மிகப் பெரிய அறைகூவலை விடுத்தார்கள்.

கடவுள் மறுப்பு பலகைகள்: தமிழகத்தில் 30 மாத திமுக ஆட்சி அனைத்து மக்களுக்கும் எதிரானது. 1967-ல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இதே ஶ்ரீரங்கம் கோவிலில் ஒரு பலகையை வைத்திருக்கின்றனர். கடவுளை நம்புகிறவன் முட்டாள்; ஏமாளி, அதனால் கடவுளை யாரும் நம்பாதீங்கன்னு தமிழகத்தில் இருக்கிற எல்லா கோவில்களிலும் இதேபோல ஒரு கம்பத்தை வைத்து பலகையை வைத்துள்ளனர். ஆனால் இந்துக்கள் நாம் அமைதியான வழியில் அறவழியில் வாழ்க்கையை வாழ்கிறோம்.
பெரியார் சிலை அகற்றம்: இந்த ஶ்ரீரங்கம் மண்ணில் இருந்து பாரதிய ஜனதா கட்சி உறுதி எடுத்து கொள்கிறது. தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி வரும்பொழுது முதல் வேளையாக அந்த கம்பத்தை அப்புறப்படுத்துவது; நம்முடைய ஆழ்வார்களில் இருந்து நாயன்மார்களில் இருந்து அவர்களுடைய சிலைகள் அங்கே வைக்கப்படும். தமிழ்ப் புலவர்களுடைய சிலைகள் வைக்கப்படும். தமிழ்ப் புலவர் திருவள்ளுவர் சிலை வைக்கப்படும். நம்முடைய சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட வீரர்கள் யாரெல்லாம் இருக்கிறார்களோ அவர்களுடைய சிலையை வைப்போம். கடவுளை நம்புகிறவன் முட்டாள் என சொல்லக் கூடிய சிலையை பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த முதல் நொடியிலேயே தமிழகத்தில் இருக்கிற அனைத்து கோவில்களிலும் அகற்றிக் காட்டும்.
மருதிருவர் போல யாத்திரையின் பிரகடனம்: சனாதன தர்மம் ஒழிய தமிழகத்தில் அத்தனை கட்சிகளுமே காரணம். அதேபோல இந்து அறநிலையத்துறை என்கிற அமைச்சரவையும் இருக்காது. இந்துசமய அறநிலையத்துறையின் கடைசிநாள், தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வரும் முதல் நாளாக இருக்கும். அன்று மருது பாண்டியர்களின் ஜம்பு தீவு பிரகடனம் போல இது என் மண் என் மக்கள் யாத்திரையின் பிரகடனம். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

கனிமொழி பதிலடி: அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு திமுக உளிட்ட கட்சிகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தூத்துக்குடியில் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அண்ணாமலையின் பேச்சு குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு கனிமொழி சிரித்து கொண்டே அளித்த பதில்: அவரு ஆட்சிக்கு வந்தாதானே? அது நடக்கப் போறதே இல்லை.. அதை பற்றி எதுக்கு நாம கவலைப்படனும். இவ்வாறு கனிமொழி எம்.பி. கூறினார்.
"தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்து சமய அறநிலையத்துறை ஒழிக்கப் படும்" என்று சிலர் பேசியுள்ள நிலையில்
— திமுக மகளிர் அணி (@DMKWomensWing) November 8, 2023
“நடக்கப் போகாத ஒன்றைக் குறித்து நாம் எதற்காகக் கவலைப் பட வேண்டும்?” என்று பதிலளித்துள்ளார் கழகத் துணைப் பொதுச்செயலாளர் திருமிகு. @KanimozhiDMK எம். பி அவர்கள்.… pic.twitter.com/FbkZ5GApGY












Click it and Unblock the Notifications