வேண்டும் வேண்டும் நியாயம் வேண்டும்.. கோவில்பட்டியில் எம்பி கனிமொழி சாலை மறியல்
கோவில்பட்டி: கோவில்பட்டியில் நடத்தப்பட்ட மறைமுக தேர்தலில் முறைகேடு நடத்தப்பட்டதற்கு நீதி வேண்டும் நியாயம் வேண்டும் என கோரிக்கை விடுத்த எம்பி கனிமொழி தொண்டர்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.
கோவில்பட்டி ஒன்றியத் தலைவர் பதவிக்கு இன்று மறைமுகத் தேர்தல் நடைபெற்றது. இதில், அதிமுக வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார். மொத்தம் உள்ள 19 வார்டு உறுப்பினர்களில் 10 பேர் அதிமுகவுக்கு ஆதரவாகவும், 9 பேர் திமுகவுக்கு ஆதரவாகவும் வாக்களித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால், 10 உறுப்பினர்கள் தங்களுடன் இருக்கும்போது எப்படி அதிமுக வெற்றி பெற முடியும்? என திமுக கேள்வி எழுப்பியது. இதுகுறித்து தகவலறிந்த கனிமொழி நேராக வந்து அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அவர்களோ மறைமுகத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கையின்படியே முடிவை அறிவித்ததாக கூறினர்.
இந்தியாவில் முதல் நபர்.. கேரளாவை சேர்ந்த இளைஞருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது.. பரபரப்பு!
இந்த விளக்கத்தால் திருப்தி அடையாத திமுக உறுப்பினர்கள், ஒன்றிய அலுவலகத்திலேயே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கனிமொழி எம்.பி. தலைமையில் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். மறுதேர்தலை நடத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவில்பட்டி ஒன்றியத் தலைவர் தேர்தலில் முறைகேடாக அதிமுக வெற்றிப் பெற்றிருப்பதாக கூறிய கனிமொழி, இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். எங்களுக்கு நீதி வேண்டும், நியாயம் வேண்டும் என்று கனிமொழி தெரிவித்தார்.