சாத்தான்குளம்.. ஹைகோர்ட் சுளீர்.. லாக்-அப் சாவுக்கு முடிவு வேண்டும்.. அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
தூத்துக்குடி.. தந்தை, மகன் மர்ம மரணம்.. விசாரணை ஆரம்பம்
தூத்துக்குடி: "லாக்-அப் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்... போலீஸ் அதிகாரிகளுக்கு அரசு உரிய வழிகாட்டுதல்களை பிறப்பிக்க வேண்டும்... இந்த வழக்கின் நிலை தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்... இந்த வழக்கை ஹைகோர்ட் கண்காணித்து கொண்டிருக்கிறது.. இதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்" என்று சாத்தான்குளம் ஜெயிலில் தந்தை, மகன் மரணம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் மதுரை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அரசரடி தெருவை சேர்ந்தவர் ஜெயராஜ்.. அவரது மகன் பென்னீக்ஸ், அப்பகுதியில் உள்ள பஸ் ஸ்டேண்டில் செல்போன் கடை வைத்துள்ளனர்.
இதில் பென்னிக்ஸ்-க்கு இன்னும் 2 மாசத்தில் கல்யாணம் வைத்திருந்தார்களாம். இந்நிலையில், கடந்த 19 ம் தேதி இரவு கடையை மூடுவது தொடர்பாக சாத்தான்குளம் போலீசாருக்கும், தந்தை, மகனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

கைதிகள்
இருவரையும் போலீசார் அழைத்து சென்று வழக்கும் பதிவு செய்து கோவில்பட்டி கிளை ஜெயிலில் அடைத்தனர். இந்நிலையில் கைதிகளாக இருந்த தந்தையும் மகனும் அடுத்தடுத்து உயிரிழந்துவிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

ஆவேசம்
இதைகேட்டு அதிர்ந்த வியாபாரிகள், பொதுமக்கள் நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்... சிபிஐ விசாரணை வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.. எதிர்க்கட்சிகள் மர்ம மரணத்தில் சந்தேகம் உள்ளது என்று குற்றம் சாட்டி வருகின்றனர்.. போலீசார் அடித்ததில்தான் தன் கணவனும், மகனும் இறந்துவிட்டனர், இதற்கு நியாயம் வேண்டும் என்று கேட்டு ஜெயராஜ் மனைவி செல்வராணி கோர்ட் வாசல் படியை மிதித்துள்ளார்.

விசாரணை
இதையடுத்து, சம்பந்தப்பட்ட சாத்தான் குளம் காவல் உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் ஆகியோர் அவசர அவசரமாக ஆயுதப் படைக்கு மாற்றப்பட்டாலும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேரைல என்று அறிவித்தாலும், இந்த விவகாரம் விஸ்வரூமெடுத்துள்ளது... தந்தை, மகனின் சடலங்கள் வைக்கப்பட்ட பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு மாஜிஸ்திரேட் பாரதிதாசன் நேரிலேயே சென்று விசாரணை நடத்தினார்.

மதுரை ஹைகோர்ட்
இந்த விவகாரம் தொடர்பாக மதுரை ஹைகோர்ட் கிளை தாமாக முன்வந்து வழக்காக பதிவு செய்தது.. அத்துடன் இன்றே இந்த விசாரணையையும் நடத்தி முடித்தது.. நீதிபதிகள் பிஎன் பிரகாஷ், பி.புகழேந்தி ஆகியோர் டிஜிபி, தூத்துக்குடி எஸ்பி இருவரையும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் கோர்ட்டில் ஆஜராக உத்தரவிட்டனர். ஆனால், டிஜிபி முதல்வரின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றதால், அவருக்கு பதிலாக தென் மண்டல ஐஜி சண்முக ராஜேஸ்வரன், தூத்துக்குடி எஸ்பி அருண்பாலகோபாலன் ஆகியோர் ஆஜராகினர்.

நடவடிக்கை
அப்போது ஐஜி சொல்லும்போது, "இந்த சம்பவம் தொடர்பாக சாத்தான்குளம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணஷ், ரகுகணேஷ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்... காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். தலைமைக் காவலர்கள் முருகன், முத்துராஜ் ஆகியோர் மீது துறைரீதியான நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார்.

விளக்கம்
தூத்துக்குடி எஸ்பி சொல்லும்போது, "சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோவில்பட்டி நீதித்துறை நடுவர் உயிரிழந்தவர்களின் உறவினர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்றார். இரு தரப்பையும் கேட்ட நீதிபதிகள் சொன்னதாவது:

முற்றுப்புள்ளி
"இதுபோன்ற லாக்அப் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். இதற்காக காவல்துறை அதிகாரிகளுக்கு அரசு உரிய வழிகாட்டுதல்களை பிறப்பிக்க வேண்டும்... கோவில்பட்டி நீதித்துறை நடுவரின் விசாரணை அறிக்கை மற்றும் 2 பேரின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர், அதன் வீடியோ பதிவு ஆகியவற்றை மூடி, சீல் போட்ட கவரில் வைத்து கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்.. இந்த வழக்கின் நிலை தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
Recommended Video

கண்காணிக்கிறோம்
போஸ்ட் மார்ட்டத்திற்கு பிறகு கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை பின்பற்றி உடல்களை அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊரடங்கு கட்டுப்பாடுகளில் எவ்வித தளர்வும் அளிக்கக்கூடாது. இந்த வழக்கை உயர் ஹைகோர்ட் கண்காணித்து கொண்டிருப்பதையும், உரிய நீதி வழங்கப்படும் என்பதையும் பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் தெரிவிக்க வேண்டும்" என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து, இது தொடர்பான விசாரணை ஜுன் 26-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications