குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா.. திரண்டு வந்த பக்தர்கள்! திணறிய திருச்செந்தூர்
தூத்துக்குடி: குலசேகரபட்டினம் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு காப்பு அணிந்து தரிசனம் செய்தனர்.
உலகப் புகழ்பெற்ற தசரா திருவிழா, மைசூருக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே குலசேகரபட்டினம் முத்தாரம்மன் திருக்கோவிலில் வெகு விமர்சையாக ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

நவராத்திரி தினத்தை முன்னிட்டு கொண்டாடப்படும் இந்த தசரா திருவிழா, நேற்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் துவங்கியது. பக்தர்களின் கோரிக்கையை ஏற்று முதன் முறையாக பிரம்ம முகூர்த்தத்தில் இந்த கொடியேற்றமானது நேற்று துவங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை 1.00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு காலை 3.00 மணிக்கு கொடி பட்டம் ஊர்வலம் நடைபெற்றது.
தொடர்ந்து அதிகாலை 5.30 மணிக்கு மேல் 6.00 மணிக்குள் உள் பிரகாரத்தில் உள்ள செப்பு கொடிமரத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடி ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து கொடி மரத்துக்கு, பால், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடைபெற்று மகா தீபாராதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் திருகாப்பு அணிந்து சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் இந்த திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் சுமார் 500க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டுள்ளனர். கொடியேற்றத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன. திருவிழா நாட்களில், ஒவ்வொரு நாளும் அம்மன் பல்வேறு கோலத்தில் எழுந்தருளி வீதி உலாவரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்காரம் வரும் 2-ம் தேதி நள்ளிரவில் இரவில் கோவில் கடற்கரையில் நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications