பயிற்சி மருத்துவரை கடத்திய வழக்கில் கைதான.. அமைச்சர் அனிதாவின் ஆதரவாளர் மீது நில அபகரிப்பு புகார்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் பயிற்சி பல் மருத்துவரைக் கடத்தி தாக்கியதாக ஓட்டப்பிடாரம் ஒன்றிய திமுக செயலாளரும், ஊராட்சி மன்றத் தலைவருமான இளையராஜா கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் மீது விவசாயி ஒருவர் நில அபகரிப்பு புகாரும் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருக்கழுக்குன்றத்தை சேர்ந்த பத்மநாபன் என்பவரது மகன் முருகப்பெருமாள். 25 வயதாகும் இவர், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பல் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.
சபரிமலை ஐயப்பன் பிரசாதம் 6 நாட்களில் ரூ.5 கோடிக்கு விற்பனை.. இருவழிப்பாதையில் பக்தர்கள் அனுமதி
இவர் கடந்த 18 ஆம் தேதி பணியை முடித்து விட்டு மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த போது காரில் வந்த அடையாளம் தெரியாத 3 பேர் அவரை கடத்தியுள்ளனர்.
கடத்தல்
முருகப்பெருமாளை ஓட்டப்பிடாரம் பகுதியில் தோட்டத்தில் அடைத்து வைத்துத் தாக்கியுள்ளனர். மேலும், அவரிடம் இருந்த விலையுயர்ந்த செல்போனை பறித்துக்கொண்ட கடத்தல் கும்பல் அவரை மீண்டும் அதே அரசு மருத்துவமனை வளாகத்தில் கொண்டு விட்டுச் சென்றது. மேலும், இது தொடர்பாக வெளியே யாரிடமும் எதுவும் கூறக்கூடாது என்றும் மீறிக் காவல் துறையிடம் புகார் அளித்தால் குடும்பத்தையே கூண்டோடு அழித்துவிடுவோம் என மிரட்டியுள்ளனர்.
பல் மருத்துவர் மீது தாக்குதல்
தூத்துக்குடிக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முருகப்பெருமாள், இது தொடர்பாக போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அரசு மருத்துவர் ஒருவரை அடையாளம் தெரியாத கும்பல் கடத்தி தாக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பானது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த தூத்துக்குடி தென்பாகம் போலீஸார் தீவிர விசாரணை செய்தனர். அதில் பல் மருத்துவர் மருத்துவர் முருகப்பெருமாளை கடத்தியது ஓட்டப்பிடாரம் ஊராட்சி மன்றத் தலைவரும், ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக செயலருமான இளையராஜா என்பது தெரிய வந்தது.
திமுக நிர்வாகி கைது
இதையடுத்து, இளையராஜாவைக் கைது செய்த தென்பாகம் போலீஸார் அவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பயிற்சி மருத்துவர் முருகப்பெருமாள் தன்னுடன் பணியாற்றி வரும் பயிற்சி மருத்துவரைக் காதலித்து வருவதாகவும் இதை விரும்பாத அப்பெண்ணின் தந்தையே இளையராஜாவிடம் இது குறித்துத் தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே பயிற்சி மருத்துவரை இளையராஜாவும் அவரது கூட்டாளிகளும் கடத்தி தாக்கியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
நில அபகரிப்பு புகார்
தற்போது கைது செய்யப்பட்டுள்ள இளையராஜா திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் தீவிர ஆதரவாளர் எனக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில் தூத்துக்குடியைச் சேர்ந்த முத்துவேல் என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் நில அபகரிப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் ஓட்டப்பிடாரத்தில் உள்ள தனது 11.66 ஏக்கர் விவசாய நிலத்தில் மூன்று ஏக்கரை இளையராஜா தனது பெயருக்கு எழுதித் தரக் கேட்டதாகவும் அதற்குத் தான் மறுத்துவிட்டதாகக் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இளையராஜா நிலத்துக்குள்ள அத்துமீறி நுழைந்து கல்தூண்கள் நட்டு தனது நிலத்தை அபகரித்துக் கொண்டதாகப் புகார் அளித்துள்ளார்.
ஆட்சியரிடம் மனு
மேலும் இது தொடர்பாக ஓட்டப்பிடாரம் காவல்நிலையத்தில் புகார் அளித்த போதிலும் போலீசார் இளையராஜாவிடம் விசாரணை நடத்தவில்லை என தனது மனுவில் தெரிவித்துள்ளார். மீண்டும் போலீசாரிடம் புகார் அளித்தால் குடும்பத்துடன் கொலை செய்துவிடுவேன் என மிரட்டுவதாகவும் இதனால் இளையராஜாவிடமிருந்து தனது நிலத்தை மீட்டுத் தர வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். ஏற்கனவே, அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக நிர்வாகி மீது நில அபகரிப்பு புகாரும் அளிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக தலைமை டென்ஷன்
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர் பில்லாஜெகன், விருந்தினர் மாளிகையில் தகராறு செய்த விவகாரத்தில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தச் சம்பவம் திமுக தலைமைக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இது தொடர்பாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் விளக்கமும் கேட்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.