சென்னையில் நடந்த அதே சம்பவம்..வெள்ளத்தில் தத்தளிக்கும் தூத்துக்குடி..மேம்பாலத்தில் கார்கள் நிறுத்தம்
தூத்துக்குடி: கனமழையின் காரணமாக தூத்துக்குடி மாவட்டம் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னையை போல் கனமழை, வெள்ளத்துக்கு பயந்து தூத்துக்குடி மக்கள் தங்களின் சொந்த கார் மற்றும் ஆட்டோக்களை மேம்பாலங்களில் நிறுத்தி உள்ளனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தென்தமிழக மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது.

இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இதில் தூத்துக்குடி மாவட்டத்தை எடுத்து கொண்டால் பல இடங்களில் தண்ணீரில் தத்தளிக்கிறது. தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அதேபோல் கலெக்டர் அலுவலகம் மற்றும் அதனை சுற்றிய கிராமங்களில் மழை நீர் தேங்கி உள்ளது. தூத்துக்குடி ரயில் நிலையத்தில் தண்ணீர் தேங்கி உள்ளதால் ரயில்களின் புறப்படும் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
தாமிரபரணி ஆற்றில் வெளியேற்றப்படும் தண்ணீர் தூத்துக்குடி புன்னக்காயல் அருகே கடலில் கலக்கும். தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் புன்னக்காயல் பகுதி தனித்தீவாக மாறி காட்சியளிக்கிறது. வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.அங்குள்ள மக்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை போல் தூத்துக்குடியிலும் பொதுமக்கள் அச்சமடைந்து தங்களின் கார், ஆட்டோக்களை மேம்பாலங்களின் நிறுத்தி வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு பெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் பெய்த கனமழையின்போது வசிக்கும் மக்கள் வேளச்சேரி மற்றும் அதனை சுற்றிய மேம்பாலங்களில் நிறுத்தினர். அதேபோல் இப்போது தூத்துக்குடியில் வசிக்கும் மக்களும் தங்களின் கார்களை மேம்பாலங்களில் நிறுத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் இதேபோல் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. வாகனங்கள் தண்ணீரில் மூழ்கி பழுதாகின. அதன்பிறகு பொதுமக்கள் சொந்த பணத்தை செலவு செய்து கார்களை பழுது நீக்கினர். தற்போதும் தூத்துக்குடி மாவட்டத்தில் பல இடங்களில் கனமழை பெய்து வருவதோடு, திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்யும் கனமழையால் தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் கார்களை பாதுகாப்பு கருதி மேம்பாலங்களில் நிறுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications