செல்பி எடுத்துவிட்டு! கிளம்பும்போது "வரட்டுமா"னு யானையை தட்டினாரா சிசுபாலன்? தெய்வானைக்கு கோபம் ஏன்?
திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோயில் பெண் யானை தெய்வானை மிதித்ததில் இருவர் உயிரிழந்த நிலையில் அந்த யானையுடன் செல்பியுடன் எடுத்ததால் கோபப்பட்டதா என்பது குறித்து சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள முருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகிறார்கள். தமிழகம் மட்டும் இன்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து கடற்கரையிலும் கிணற்றிலும் குளித்துவிட்டு முருகனை வழிபட்டு செல்கிறார்கள்.

இங்கு சூரசம்ஹார நிகழ்ச்சி கடந்த இரு வாரங்களுக்கு முன்பு நடைபெற்றது. முருகனின் அறுபடை வீடுகளில் திருச்செந்தூர் முருகன் கோயில் 2ஆவது படைவீடாக திகழ்கிறது. அறுபடைகளில் 5 படை வீடுகள் மலையின் மீதும், திருச்செந்தூரில் உள்ள ஒரே ஒரு படைவீடு மட்டும் கடற்கரை அருகே அமைந்திருப்பது மிகவும் விசேஷம்.
இந்த கோயிலில் 17 வயதான பெண் யானை தெய்வானை வளர்க்கப்பட்டு வருகிறது. இது விழாக்களின் போது பக்தர்களுக்கு ஆசி வழங்கும். இந்த யானை அஸ்ஸாமிலிருந்து வரவழைக்கப்பட்டது. இதை திருச்செந்தூர் கோயில் அறங்காவலராக இருந்தவர் 2006 ஆம் ஆண்டு வாங்கி திருச்செந்தூர் முருகனுக்கு கொடுத்துவிட்டார்.
இந்த யானை அஸ்ஸாமிலிருந்த வந்த போது அதற்கு 6 வயது. தற்போது 17 வயதாகிறது. கிட்டதட்ட 11 ஆண்டுகளாக இந்த கோயிலில் இருந்து வருகிறது. இதை பாகன் உதயகுமார் என்பவர் பராமரித்து வந்தார். இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தெய்வானை அதன் கொட்டகையில் கட்டப்பட்டிருந்தது.
அங்கு பாகன் இருந்தார். அப்போது அவரை பார்க்க அவருடைய உறவினர் சிசுபாலன் என்பவர் சென்றிருந்தார். அப்போது இருவரையும் யானை திடீரென மிதித்ததால் அவர்கள் இருவரும் உயிரிழந்துவிட்டனர். இதுகுறித்து வனத்துறையினர் நேரில் வந்து ஆய்வு செய்தனர்.
யானை இருவரை மிதித்து கொன்றதால் திருச்செந்தூர் கோயில் 45 நிமிடங்கள் மூடப்பட்டு பின்பு நடை திறக்கப்பட்டது. தற்போது யானையானது சாந்தமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இருவரை கொன்றதற்கு பிறகு யானை உணவு சாப்பிடவில்லையாம். அதை உணவு உட்கொள்ள வைக்க முயற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் இந்த யானை தாக்குதலில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது சிசுபாலனும் உதயகுமாரும் பேசிக் கொண்டிருந்தனர். பிறகு சிசுபாலன் அந்த இடத்தை விட்டு கிளம்புவதற்கு முன்பு செல்பி எடுக்க விரும்பினார், பாகன், யானை தெரியும்படி செல்பி எடுத்தார்.
இதைத் தொடர்ந்து யானையை தட்டிய சிசுபாலன் வரட்டுமா என கேட்டதாக தெரிகிறது. இதனால் யானைக்கு கோபம் ஏற்பட்டு அவரை தாக்கியிருக்கலாம் என்கிறார்கள். இந்த தாக்குதலை தடுப்பதற்கு வந்த பாகனை சுவற்றுடன் சேர்த்து நசுக்கியே கொன்றதாக தெரிகிறது. இது குறித்து சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications