மக்கள் மனநிலை என்ன? ஸ்டாலினிடம் ஒளிவுமறைவின்றி உண்மையை உடைத்து பேசிய அமைச்சர் எ.வ.வேலு!
தூத்துக்குடி: நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத பெருமழையால் மக்கள் வீடுகளையும், பொருட்களையும் இழந்து சொல்லொணாத் துயரத்துக்கு ஆளாகியுள்ளனர்.
வெள்ளநீர் வீட்டுக்குள் வருமளவுக்கு மழை பெய்யும் என்பதை எதிர்பார்க்காத நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட மக்கள், நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அமைச்சர்களிடம் தங்கள் ஆக்ரோஷத்தை வெளிக்காட்டத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக அமைச்சர் எ.வ.வேலுவை ஒரு இடத்தில் சூழ்ந்துகொண்ட பொதுமக்கள் அவரிடம் தங்கள் மொத்தக் கோபத்தையும் கொட்டத் தொடங்கினர். இதனால் அந்த இடமே பரபரப்பானது. காவல்துறையினர் மிகுந்த சிரமத்துடன் அமைச்சர் எ.வ.வேலுவை அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.

இதேபோல் தான் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள பல பகுதிகளில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மீது பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் ஆவேசத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஒரு பக்கம் நெல்லை, தூத்துக்குடி மழை வெள்ளப் பாதிப்பு மற்றொரு பக்கம் தனது அமைச்சரவையில் உள்ள பொன்முடி குற்றவாளி என தீர்ப்பு என முதல்வர் ஸ்டாலின் 2 நாட்களாகவே அப்செட் மனநிலையில் காணப்படுகிறார்.
இருப்பினும் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு போன்றவர்களிடம் அலைபேசி மூலம் அடிக்கடி பேசிய ஸ்டாலின், நெல்லை, தூத்துக்குடி மாவட்ட கள நிலவரங்கள் பற்றி கேட்டறிந்துக்கொண்டே இருந்தார். சென்னையை காட்டிலும் பாதிப்பு அதிகம் என்பதால் மீட்புப் பணியும், நிவாரணப் பணியும் சவாலாக உள்ளதாக கூறிய அமைச்சர் எ.வ.வேலு, மக்களின் கோப மன நிலை குறித்தும் ஒளிவு மறைவின்றி முதலமைச்சர் ஸ்டாலினிடம் தெரியப்படுத்தி இருக்கிறார்.

முடிந்தவரை மக்களின் கோபத்தை தணிப்பதற்கான நடவடிக்கைகளை களத்தில் நின்று தாங்கள் எடுத்து வருவதாக கூறிய அமைச்சர் எ.வ.வேலு, ஓரிரு நாட்களில் இயல்பு நிலை திரும்பி விடும் எனவும் தெரிவித்திருக்கிறார். இதனிடையே நேற்று மத்தியக் குழு வெள்ளப்பாதிப்பு பகுதிகளை பார்வையிட்ட நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் இன்று நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ளப் பாதிப்புகளை பார்வையிடுகிறார். இதில் ஹைலைட் என்னவென்றால் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனே 3 நாட்களாக வெள்ளத்தில் சிக்கி தவித்தது தான்.












Click it and Unblock the Notifications