தூத்துக்குடி பனிமய மாதா தேவாலய திருவிழா! அமைச்சர் கீதா ஜீவனின் சென்டிமெண்ட்! பின்னணி என்ன?
தூத்துக்குடி: தூத்துக்குடி பனிமய மாதா தேவாலயத்தின் கொடியேற்ற நிகழ்வில் அமைச்சர் கீதா ஜீவன் கலந்துகொண்டு மனமுருக பிரார்த்தனை செய்தார்.
ஆண்டுதோறும் பனிமய மாதா தேவாலய திருவிழாவிலும், கொடியேற்ற நிகழ்ச்சியிலும் பங்கேற்பதை சென்டிமெண்டாகவே கருதி வருகிறார் அமைச்சர் கீதா ஜீவன்.
இன்று நேற்று என்றில்லாமல் பல ஆண்டுகளாக பனிமய மாத ஆலய திருவிழாவில் பங்கேற்பதை அமைச்சர் கீதா ஜீவன் வழக்கமாக கொண்டுள்ளார்.

தூத்துக்குடி நகர்
தூத்துக்குடியில் அமைந்துள்ள பனிமய மாதா ஆலயமானது உலகப்புகழ் பெற்ற ஒரு வழிபாட்டுத் தலமாக கருதப்படுகிறது. ஆண்டுதோறும் ஜூலை 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் திருவிழா ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை நடைபெறும். இதில் பங்கேற்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி கேரளா, மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிவார்கள்.

அமைச்சர் கீதா ஜீவன்
இந்நிலையில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவனை பொறுத்தவரை தனக்கு எத்தனை பணிகள் இருந்தாலும் அவைகளை சற்று ஒதுக்கி வைத்துவிட்டு, ஆண்டுதோறும் ஜூலை 26-ஆம் தேதி தூத்துக்குடி பனிமய மாதா தேவாலய கொடியேற்ற நிகழ்விலும், அதன் பின்னர் நடைபெறும் திருவிழாவின் சிறப்பு திருப்பலிகளிலும் கலந்துகொள்வார். தனது சிறுவயது முதலே அவர் இதை ஒரு சென்டிமெண்டாக கருதி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜெகன் பெரியசாமி
இதேபோல் தூத்துக்குடி மாநகராட்சி மேயராக உள்ள அமைச்சர் கீதா ஜீவனின் சகோதரர் ஜெகன் பெரியசாமியும் ஆண்டு தவறாமல் பனிமய மாதா திருவிழாவில் கலந்துகொள்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார். பத்தாண்டுகளுக்கு முன்னர் ஒரு முறை தூத்துக்குடி சென்றிருந்த முதலமைச்சர் ஸ்டாலினை, அப்போது மாவட்டச் செயலாளராக இருந்த அமைச்சர் கீதா ஜீவனின் தந்தை பெரியசாமி பனிமயமாதா தேவாலயத்துக்கு அழைத்துச் சென்று அதன் பெருமைகளை எடுத்துக் கூறியது குறிப்பிடத்தக்கது.

மாடத்தில் நின்று
இதனிடையே இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில் இந்தாண்டு பனிமய மாதா தேவாலயத்தின் கொடியேற்ற நிகழ்ச்சியில் கூட்டம் குவிந்து வழிந்தது. இதனால் மாடத்தில் நின்றவாறு கொடியேற்றக் காட்சிகளை பார்த்த அமைச்சர் ஜீதாஜீவன், திருவிழா நடைபெறும் அடுத்த 10 நாட்களும் உரிய அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்துக்கொள்ளுமாறு தனது சகோதரர் மேயர் ஜெகன் பெரியசாமிக்கும், காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டு புறப்பட்டுச் சென்றார்.












Click it and Unblock the Notifications