அண்ணாமலைக்கு தண்ணி காட்டிய அமைச்சர் கீதா ஜீவன்.. முத்து நகரில் கவுன்சிலர்களை இழுக்கும் பிளான் பனால்!
தூத்துக்குடி : தூத்துக்குடி மாநகராட்சி கவுன்சிலர்கள் சிலர், அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணையப்போவதாக தகவல்கள் பரவிய நிலையில், உடனே 'ஐடியா' செய்து கவுன்சிலர்கள் கட்சி தாவ விடாமல் தடுத்துள்ளார் அமைச்சர் கீதா ஜீவன்.
கோவில்பட்டியில் நடைபெற்ற பாஜக மாநாட்டில் அண்ணாமலை முன்னிலையில் திமுக கவுன்சிலர்கள் சிலர் பாஜகவில் இணைவதாக இருந்ததாம்.
இந்த மேட்டர் அமைச்சர் கீதா ஜீவன் கவனத்துக்குச் செல்லவே, உடனே, அத்தனை திமுக கவுன்சிலர்களையும் 'பேக்கப்' செய்து குற்றாலத்துக்கு அனுப்பிவிட்டாராம்.

பாஜக மாநாடு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சாலைப்புதூர் மைதானத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக கட்சி அனைத்து அமைப்புகள், பிரிவுகள் சார்பில் மாற்றத்திற்கான மாநாடு கடந்த 10ஆம் தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டில் மாநிலத் தலைவர் அண்ணாமலை, துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநில பொதுச்செயலாளர் பொன்.பாலகணபதி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

டூர் கூட்டிட்டு கிளம்புங்க
இந்த மாநாட்டின்போது, திமுகவைச் சேர்ந்த தூத்துக்குடி மாநகராட்சி கவுன்சிலர்கள் சிலர் பாஜகவில் இணையப்போவதாக தகவல்கள் கசிந்தன. இதனால் லோக்கல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. இதுகுறித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும், சமூக நலத்துறை அமைச்சருமான கீதா ஜீவன் கவனத்துக்கு தகவல் சென்றுள்ளது. உடனே, அவர், மாநகர செயலாளர் தலைமையில், அத்தனை திமுக தூத்துக்குடி மாநகராட்சி கவுன்சிலர்களையும் குற்றாலத்துக்கு டூர் அழைத்துச் செல்ல உத்தரவிட்டாராம்.

பாஜக திட்டம் தவிடுபொடி
இதையடுத்து, திமுக கவுன்சிலர்கள் அனைவரும் குற்றாலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு, அதிருப்தியில் உள்ள கவுன்சிலர்களிடம் விசாரித்து, பாஜகவுக்குச் சென்றால் எதிர்காலம் காலி, எம்.பி தேர்தல் வரப்போகிறது, கட்சியில் உழைப்பவர்களுக்கு வெகுமதி நிச்சயம் எனப் பேசி சமாதானம் செய்து, பாஜக மாநாடு முடிந்த பிறகு அடுத்த நாள் அழைத்து வந்தார்களாம். இந்த நிகழ்வால் தூத்துக்குடி பாஜகவினர் கடுமையாக அப்செட் ஆகியுள்ளனர்.

கனிமொழி பங்கேற்ற நிகழ்வில்
அதே நாளில், தூத்துக்குடியில் உள்ள செயின்ட் மேரீஸ் பள்ளியில் எம்.பி கனிமொழி, மெகா மருத்துவ முகாமை தொடங்கி வைத்துள்ளார். அப்போது கவுன்சிலர்கள் யாரும் பங்கேற்காமல், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மட்டும் கலந்து கொண்டார். கனிமொழி எம்.பிக்கு நெருக்கமானவரான அமைச்சர் கீதா ஜீவன், கவுன்சிலர்கள் வரமாட்டார்கள் என முன்பே அவரிடம் காரணத்தையும் சொல்லி விட்டாராம்.

பவர் காட்டிய அமைச்சர்
இப்படியாக, மாநகராட்சி கவுன்சிலர்களை மொத்தமாக டூர் அனுப்பி, பாஜக போட்ட பிளானை சுக்கு நூறாகச் சிதைத்திருக்கிறார் கீதா ஜீவன். இதோடு, தூத்துக்குடி மாவட்ட திமுகவிலும் தனது செல்வாக்கை நிரூபித்திருக்கிறார் என்கிறார்கள். கடந்த சில மாதங்களாக கீதா ஜீவனுக்கும், அவரது தம்பியான தூத்துக்குடி மேயர் ஜெகனுக்கும் இடையே உரசல் இருந்து வந்த நிலையில், மாநகராட்சி கவுன்சிலர்கள் தன் பக்கமே என்றும் காட்டியிருக்கிறாராம் கீதா ஜீவன்.

விடுவிப்பு
இதற்கிடையே, 19 ஆண்டுகளாக நடைபெற்று வந்த சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் கீதா ஜீவன், அவரது சகோதரர் ஜெகன் பெரியசாமி, கீதா ஜீவனின் கணவர் உள்ளிட்ட 5 பேரை விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு தீர்ப்பு காரணமாக, உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பு ஏற்றபோது கூட சென்னை வராமல் தவிர்த்தார் கீதா ஜீவன். தனக்கு பெரும் குடைச்சலாக இருந்து வந்த இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதால், நிம்மதி அடைந்துள்ளார் அமைச்சர் கீதா ஜீவன்.












Click it and Unblock the Notifications