ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கனும்.. தூத்துக்குடி கலெக்டர் ஆபீசில் திரண்ட இந்து மக்கள் கட்சியினர்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மக்கள் திரண்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக குரல் எழுப்பி தர்ணாவில் ஈடுபட முயன்ற 43 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கோரி திடீரென மனுக்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குவிந்ததால் அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர்.
பதவியை ராஜினாமா செய்க! காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுக்கு குடைச்சல் தரும் பாஜக! தூள் பறக்கும் தூத்துக்குடி!
ஸ்டெர்லைட் ஆலை
தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வலியுறுத்தி இந்து மக்கள் கட்சியினர், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினர், மகளிர் அமைப்பினர், என பல தரப்படோரும் மனுக்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்தனர். இதனால் போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. குறிப்பிட்ட சிலரை மட்டும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுக்க அனுமதித்த காவல்துறை மற்றவர்களை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.
43 பேர் கைது
இதனிடையே தர்ணாவில் ஈடுபட முயன்ற 43 பேரை காவக்துறையினர் கைது செய்து விடுவித்தனர். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளதால் 20 ஆயிரம் பேர் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை இழந்து தவித்து வருகிறர்கள் என்றார். ஸ்டெர்லைட் ஆலையை பற்றி வீண் வதந்திகளை ஒரு கும்பல் பரப்பியதாகவும் ஆனால் சோதனையில் அது உண்மையில்லை என்பது நிரூபணமாகியுள்ளது எனவும் கூறினார்.
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்
இதேபோல் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் லாரன்ஸ் பேசுகையில், ஸ்டெர்லைட் ஆலை மூடலால் மாவட்டத்தின் தொழில் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளதாகவும் கூறினார். இதனால் தாமதமின்றி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அரசும் மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மக்கள் போராட்டம்
ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என தூத்துக்குடி சுற்றுவட்டார மக்கள் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்திய காரணத்தால் அந்த ஆலைக்கு பூட்டு போடப்பட்டது. இப்போது ஒரு சில இயக்கத்தினர் மீண்டும் அதை திறக்கக் கோருவதால் அதன் பின்னணியில் யார் உள்ளார்கள் என்பதை உளவுத்துறை விசாரணை நடத்த ஆரம்பித்துள்ளது.