வெள்ளத்தில் சிக்கிய கணவரை காப்பாற்றி கொடுங்க.. எனக்கு யாருமே இல்ல! தூத்துக்குடி பெண் கண்ணீர் வீடியோ
தூத்துக்குடி: தூத்துக்குடியை சேர்ந்த பெண் ஒருவர், "நண்பரின் குடும்பத்தை காப்பாற்ற சென்ற என் கணவரை காணவில்லை.. எப்படியாவது காப்பாற்றி கொடுங்கள்.. எங்களுக்கு என்று யாரும் கிடையாது.. என்று கண்ணீர் மல்க உருக்கமாக கோரிக்கை வைத்துள்ளார்.
வங்க கடலில் உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் நேற்று முன் தினம் கனமழை பெய்தது. பலமணி நேரமாக கொட்டி தீர்த்த கனமழையால் 4 மாவட்டங்களிலும் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வரலாறு காணாத அளவுக்கு மழை பெயதுள்ளது.

இதனால், இரண்டு மாவட்டங்களும் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. சாலைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளதால் பல கிராமங்கள் தனித்தீவு போல காட்சி அளிக்கின்றன. வீடுகளை மூழ்கடிக்கும் அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அத்தியாவசிய பொருட்களும் இன்றி தவிக்கும் நிலை உள்ளது. அதேபோல், மின்சாரம் தொலை தொடர்பு இணைப்புகளும் கிடைக்காமல் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
கண்ணீர் வீடியோ: இந்த நிலையில், தூத்துக்குடியை சேர்ந்த பெண் ஒருவர் என் கணவரை எப்படியாவது காப்பாற்றி கொடுங்கள்.. எங்களுக்கு என்று யாரும் கிடையாது.. என்று கண்ணீர் மல்க உருக்கமாக கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகம் பரவி வருகிறது. இந்த வீடியோவில் மனைவியுடன் வீடியோ காலில் பேசும் கணவர் கூறியிருப்பதாவது:-
ஏய் அகஸ்டின்.. இப்போது தண்ணீர் கிட்டத்தட்ட என் மார்பு அளவுக்கு வந்துவிட்டது. புடித்துக்கொண்டு அப்படியே நின்றுகொண்டிருக்கிறேன். இப்போது இந்த வீடியோவில் ரோடு எங்கே இருக்கிறது என்று நான் காட்டுகிறேன். இந்த வீடியோவை காட்டு.. நான் இருக்கிற இடத்தில் வாழை மரங்கள் தான் இருக்கிறது. அதுவும் சற்று தொலைவில் இருக்கிறது" என்கிறார்.
எங்கே இருக்கார் என்றே: இந்த வீடியோவை பார்த்து விட்டு அகஸ்டின் என்ற அந்த பெண் அழுதுகொண்டே கூறுகையில், " என் கணவர் பெயர் பிரான்சிஸ். அவரோட நண்பரோட குடும்பத்தை காப்பாற்றுவதற்காக நேற்று சென்றார். ஆனால் இப்போது வரை வரவில்லை. தண்ணீரிலே மாட்டிக்கிட்டாங்க.. இப்போது வீடியோ கால் செய்தார். இதில் அவர் மார்பு அளவுக்கு தண்ணீர் வந்துவிட்டது. கார் மூழ்கி விட்டது.
காரில் ஏறி நிற்பதாக கூறினார். 4 மணி வரை தொடர்பில் இருந்தாங்க.. அதன்பிறகு கணவரை தொடர்புகொள்ள முடியவில்லை. இதற்கு பிறகு அவரை பற்றி எந்த தகவலும் இல்லை. கலெக்டர் ஆபிசுக்கு போயாச்சு.. கமிஷனர் ஆபிசுக்கு போயாச்சு.. ஆனாலும் இப்போது வரை எந்த தகவலும் இல்லை. என் கணவரை எப்படியாவது காப்பாற்றி கொடுங்கள்.. எங்களுக்கு என்று யாரும் கிடையாது..
கண்டுபிடிச்சி கொடுங்க: என்ன பண்றாங்க.. என்ன செய்றாங்கன்னு ஒன்னுமே தெரியல.. எல்லாருக்கும் இன்பார்ம் பன்னேன்.. யாரும் இப்போது வரை ஒன்னுமே சொல்லல.. யாரும் உதவி பண்ண மாட்டுக்கிறாங்க.. கலக்டர் ஆபிசுக்கு போனாலும் அங்க இங்கேன்னு அலைய விடுறாங்கா.. எனக்கு என்ன செய்வதென்றெ தெரியவில்லை.. என் கணவரை எப்படியாவது கண்டுபிடிச்சி கொடுங்க.. இவ்வாறு அந்த பெண் அழுதுகொண்டே கூறுகிறார்.












Click it and Unblock the Notifications