அவ்வளவும் தங்கம்.. தூத்துக்குடியில் ஒரே நாளில் வீட்டுக்கடனை அடைக்க ஆசை.. சேலம் போனதும் கலைந்த கனவு
தூத்துக்குடி: மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் விகாஷ் ஷிண்டே என்பவர் தூத்துக்குடியில் நகை தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த விட்டல் சிங்கடே என்பவர் வேலை செய்து வந்தார். இவர் திடீரென மாயமானார். போகும் போது சுமார் 300 கிராம் தங்க கட்டியுடன் எஸ்கேப் ஆகி உள்ளார். அவரை போலீசார், சேலத்தில் வைத்து மடக்கி பிடித்து கைது செய்தனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் விகாஷ் ஷிண்டே என்பவர் தூத்துக்குடி டபிள்யூ ஜி.சி. சாலையில் தங்க நகை தயாரிப்பு நிறுவனத்தை பல ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இங்கு பல்வேறு மாடல்களில் நகை செய்வதற்காக பழைய, புதிய நகையை உருக்கி கட்டியாக்கி வழங்கப்படும். மேலும் பல்வேறு மாடல்களில் புதிய நகைகளும் தயாரித்து கொடுப்பதை விகாஷ் ஷிண்டே செய்து வருகிறார்.

திடீரென எஸ்கேப்
விகாஷ் ஷிண்டே, தனது சொந்த மாநிலமான மகாராஷ்டிராவைச் சேர்ந்த 28 வயதாகும் விட்டல் சிங்கடே என்பவரை கடையில் வேலைக்கு வைத்துள்ளார். இவர் மகாராஷ்டிராவின் எலவிக்கவ்மேடா பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். விட்டல் சிங்கடே கடந்த ஒரு மாதமாக தூத்துக்குடி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் வேலைக்கு வந்த விட்டல் சிங்கடே, சிறிது நேரத்தில் எஸ்கேப் ஆனார். அப்போது அந்த நிறுவனத்தில் இருந்த தங்கக்கட்டிகளையும், பணத்தையும் உரிமையாளர் விகாஷ் ஷிண்டே சரிபார்த்திருக்கிறார்.
300 கிராம் தங்கம் திருட்டு
அதில், 298 கிராம் 400 மில்லி அளவில் தங்கக்கட்டி, ரூ.43 ஆயிரத்தை விட்டல் சிங்கடே திருடி சென்று இருப்பது தெரியவந்தது. இதுபற்றி உடனே தூத்துக்குடி மத்திய போலீசில் விகாஷ் ஷிண்டே புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது, 300 கிராம் தங்கக்கட்டியை திருடிய விட்டல் சிங்கடே, நெல்லை- தாதர் எக்ஸ்பிரஸ் ரயிலில் தப்பி சென்றிருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுதொடர்பாக சேலம் ரயில்வே போலீசாருக்கு தூத்துக்குடி மாவட்ட போலீஸ் நிலையத்தில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது.
சேலம் ரயில் நிலையத்தில் கைது
போலீசார் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்திற்கு நெல்லை- தாதர் எக்ஸ்பிரஸ் ரயில் வந்ததும் அந்த ரயிலின் மாற்றுத்திறனாளிகள் பெட்டிக்கு சென்று சோதனை செய்தனர். அப்போது, அங்கு படுத்திருந்த விட்டல் சிங்கடேவை மடக்கி பிடித்து விசாரித்தனர். அதில், அவர் தூத்துக்குடியில் நகை தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து தங்கக்கட்டி மற்றும் பணத்தை திருடிக்கொண்டு வந்ததை ஒப்புக்கொண்டார்.
சேலம் வந்த தூத்துக்குடி போலீஸ்
அவரை போலீசார் கைது செய்து 300 கிராம் தங்கக்கட்டி மற்றும் ரூ.43 ஆயிரம், ஒரு செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து சேலம் ரயில்வே போலீசார் மூலம் தூத்துக்குடி மத்திய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கிருந்து சப்-இன்ஸ்பெக்டர் முத்துவீரப்பன் தலைமையில் போலீசார் நேற்று காலை சேலம் வந்தனர். அவர்களிடம் விட்டல் சிங்கடே மற்றும் தங்கக்கட்டி, பணத்தை ரயில்வே போலீசார் ஒப்படைத்தனர்.
பலரிடம் கடன் வாங்கினார்
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், விட்டல் சிங்கடே ஒரு கால் ஊனமுற்றவர். இவர், கடந்த மாதம் 26-ந் தேதி தான் விகாஷ் ஷிண்டேவின் நகை தயாரிப்பு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார். சொந்த மாநிலமான மகாராஷ்ராவைச் சேர்ந்தவர் என்பதால் நம்பிக்கையுடன் வேலைக்கு சேர்த்திருந்தார். ஆனால் விட்டல் சிங்கடே சொந்த கிராமத்தில் பலரிடம் கடன் வாங்கி வீடுகட்டினாராம். இதனால் அந்த கடனை அடைக்க நகை உருக்கும் கடையில் இருந்து 300 கிராம் தங்கக்கட்டி மற்றும் பணத்தை திருடி கொண்டு மும்பை சென்ற ரயிலில் தப்பி செல்ல முயன்றதும்,இறுதியில் போலீசாரிடம் சிக்கியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications