டாஸ்மாக் கடையை மூட மறுக்கும் விஜய் அரசு.. களத்தில் குதித்த தூத்துக்குடி மக்கள்! ரொம்ப தப்புங்க!
தூத்துக்குடி: தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற பின்னர், வழிபாட்டு தலங்கள், கல்வி நிலையங்கள் மற்றும் பேருந்து நிறுத்தங்களுக்கு பக்கத்தில் இருக்கும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். ஆனால், தூத்துக்குடியில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த டாஸ்மாக் கடை மூடாமல் இருந்ததால், அதற்கு எதிராக மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
டாஸ்மாக் கடைகள் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் பகுதிகளில் இருப்பதால், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுகிறது என்றும், அதுபோன்ற கடைகளை வேறு இடங்களுக்கு மாற்றம் செய்ய வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.

முதலமைச்சர் விஜய்
இதனையடுத்து முதலமைச்சர் விஜய், தான் பொறுப்பேற்ற பின்னர் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டார். இந்த உத்தரவை 2 வாரங்களுக்குள் அமல்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தார். இப்படி இருக்கையில், அடுத்தடுத்து டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வந்தன. இருப்பினும் விஜய் வாக்குறுதி கொடுத்ததை போன்று தூத்துக்குடி செல்வநாயகபுரத்தில் இயங்கி வரும் அரசு மதுபான கடையை மூடவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தூத்துக்குடியில் பஞ்சாயத்து
இப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி மக்கள் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு, கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
தூத்துக்குடி செல்வநாயகபுரத்தில் அரசு மதுபான கடை (எண்: 9970) இயங்கி வருகிறது. பார் வசதியுடன் கூடிய இந்த கடை அருகே மருத்துவமனை, பள்ளிக்கூடம், தனியார் திருமண மண்டபம், வழிபாட்டு தலங்கள் ஆகியவை உள்ளன. எனவே இந்த கடையை அகற்றாமல் மற்ற இடங்களில் உள்ள கடைகளை மட்டும் அகற்றியதால் இப்பகுதி பொதுமக்கள் அதிருப்தி அடைந்திருந்தனர்.
டாஸ்மாக் கடைகள்
நேற்று மதியம் 12 மணியளவில் கடை திறக்கும் நேரத்தில் செல்வ விநாயகபுரம் பகுதி பொதுமக்கள் கடையை முற்றுகையிட்டு கடையை திறக்க விடமாட்டோம் என அப்பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் .
தகவல் அறிந்த வடபாகம் காவல் நிலைய காவல்துறையினர், மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தி வருகின்றனர். முதலமைச்சர் அறிவித்த 717 கடைகளின் பட்டியலில், தூத்துக்குடி மாவட்டத்தில் 63 கடைகள் இருக்கின்றன. அந்த கடைகள் அகற்றப்பட்டுள்ளன. இருப்பினும் கடை எண் 9970 இந்த லிஸ்டில் வராததால் இப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.
முதலமைச்சர் விஜய் வாக்குறுதி கொடுத்ததை போன்று, மக்களுக்கு இடையூறாக உள்ள அனைத்து மதுபான கடைகளையும் அகற்ற வேண்டும் என்று மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது புதிய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.












Click it and Unblock the Notifications