அப்பனே முருகா.. என்னப்பா இது? திருச்செந்தூர் கடலில் பச்சை பச்சையாய்? செல்ஃபி சேட்டையர்களால் அபாயம்!
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள உலக புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு அருகே கடல் திடீரென 80 அடிக்கு உள்வாங்கியதால் பாசி படிந்த பாறைகள் வெளியே தெரிந்தது. அங்கு ஆபத்தை உணராமல் பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் செல்ஃபி எடுத்ததால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழ்க் கடவுளாம் முருகப் பெருமானுக்கு தமிழகத்தில் திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய அறுபடை வீடுகள் உள்ளது. இந்த கோவில்கள் மலைமேல் அமைந்துள்ள நிலையில், கடலோரம் உள்ளது திருசெந்தூர் கோவில் மட்டுமே.

திருச்சீரலைவாய் என்று பழங்காலத்தில் அழைக்கப்பட்ட திருசெந்தூரில் முருகப் பெருமான் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமியாய் காட்சி தருகிறார். இந்த கோவிலில் முருகனை வழிபடுவதன் மூலம், திருமண தடை நீங்கும், தொழில் அபிவிருத்தி அடையும் என்பது நம்பிக்கை.
மேலும், தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் போன்ற முருகனுக்கு உகந்த நாட்களில் விரதமிருந்து திருச்செந்தூர் முருகப் பெருமானை தரிசித்து விட்டு மீன் சமைத்து சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்யும் சிறப்பு வழக்கமும் இந்த தலத்தின் தனிச் சிறப்பு. கடந்த பல ஆண்டுகளாகவே திருசெந்தூர் முருகப் பெருமானின் புகழ் பரவ பரவ, கோவிலுக்கு தினமும் வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
கடலா கடல் அலையா என தெரியாத அளவுக்கு மக்கள் வெள்ளம் திருச்செந்தூர் நோக்கி அணி அணியாக செல்கிறது. அதிலும், தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற முருகனுக்கு உகந்த நாட்களோடு சூரசம்காரத்தின் போதும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் முருகப்பெருமானை தரிசிக்க வருவர். அது மட்டுமல்ல சுப முகூர்த்த தினங்களில் நூற்றுக்கணக்கான திருமணங்களும் இங்கு நடப்பது வழக்கம்.
இந்த திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் முன்புள்ள கடற்கரையில் அமாவாசை பௌர்ணமி தினங்களில் கடல் உள்வாங்கி காணப்படுவது வழக்கம். மேலும் புயல், காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் உருவாகும் காலங்களிலும் கடல் உள்வாங்கும் நிகழ்வுகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஃபெங்கல் புயலாக உருமாறி உள்ளது. இதன் காரணமாக கடல் அரிப்பு ஏற்படும் எனவும், நாகை முதல் திருவள்ளூர் வரை கடற்கரைகளில் 9 முதல் 12 அடி உயரத்துக்கு அலை உருவாகும் என்று தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. கடலில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் இன்று முதல் 29 ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இன்று வங்கக் கடலில் புயல் சின்னம் காரணமாக திருச்செந்தூர் கடல் பகுதி சுமார் 80 அடி வரை கடல் உள்வாங்கி காணப்பட்டது.
இந்த நிலையில் தற்போது சுப்பிரமணிய சுவாமி கோவில் முன்புள்ள கடல் சுமார் 80 அடி உள்வாங்கி காணப்படுகிறது. கோவில் அருகே நாழிக்கிணறு பகுதியில் இருந்து அய்யா கோவில் வரை 500 மீட்டர் தூரத்திற்கு பச்சை படிந்த பாறைகள் வெளியே தெரிகிறது. அதன்மேல் நின்றபடி ஆபத்தை உணராமல் ஐயப்ப பக்தர்கள் செல்பி எடுத்து வருகின்றனர். இதனால் விபத்து அபாயமும் ஏற்பட்டுள்ளது. மேலும், கடல் உள்வாங்கி காணப்படுவதால் கடலில் வீசிச் சென்ற சேதமடைந்த சிலைகள் வெளியே தெரிகின்றன. இதனையடுத்து கடல் உள்வாங்கிய பகுதிகளில் காவல்துறையினர் மற்றும் கோவில் கடற்கரை பாதுகாப்பு பணியினர் அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications