ரஜினிக்கும் சம்மன் அனுப்பணும்.. அவரையும் விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி
ரஜினிக்கும் சம்மன் அனுப்ப வேண்டும் என்று சீமான் வலியுறுத்தி உள்ளார்
தூத்துக்குடி: சீமான் அசரவே இல்லை.. சுற்றிலும் கடுமையான சர்ச்சைகள் தலைவிரித்தாடி வரும் நிலையில்.. அதிமுகவை வம்பிழுத்து.. ரஜினியையும் விவகாரமாக கோர்த்து விட்டு அதிரடி காட்டியுள்ளார்.
சில தினங்களாக சீமானின் பேச்சுதான் தமிழகத்தின் சுடச்சுட விவகாரமாகி வருகிறது. ஏகப்பட்ட விமர்சனங்கள்.. கண்டனங்கள்.. வரவேற்புகள்.. நடுநிலைமைகள்.. என மாறி மாறி தாக்கங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
ராஜீவ் காந்தி கொலை குறித்து விக்கிரவாண்டி பிரச்சாரத்தில் பேசியதால், அவர்மீது வழக்கு போட்டாகி விட்டது. ஆனாலும் தன் கருத்தில் இருந்து பின் வாங்க போவதில்லை என்று உறுதியாக சொல்லிவிட்டார். சட்டப்பூர்வமாகவும் இதை அணுக போவதாக தெரிவித்துவிட்டார்.

ஆஜர்
வீடு, ஆபீஸ் என எல்லா இடங்களிலும் அவருக்கு பாதுகாப்பு போடப்பட்ட நிலையில், அவரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இன்னொரு பக்கம் கிளம்பி உள்ளனர். இந்த சமயத்தில் தூத்துக்குடி சமாச்சாரம் குறித்து சீமான் பேசி உள்ளார். துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்காக தூத்துக்குடி சென்ற சீமான், நீதிபதி அருணா ஜெகதீசன் முன்னிலையில் ஆஜரானார். அதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசினார்.

பயங்கரவாதிகள்
செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "ஸ்டெர்லைட் போராட்டத்தில் பயங்கரவாதிகள் புகுந்து விட்டார்கள் என்று ரஜினி சொன்னாரே.. இந்த விஷயம் அவருக்கு எப்படி தெரியும்? அவர் என்ன உளவுத்துறையா வெச்சிருக்கிறார்? அப்படியே அவர்கள் நடவடிக்கை எடுப்பதாகவே இருந்தாலும் பயங்கரவாதிகளை பிடித்துதானே நடவடிக்கை எடுத்திருக்கணும். அதைவிட்டுவிட்டு, அப்பாவி மக்களை ஏன் சுட்டாங்க? பயங்கரவாதிகள் புகுந்துவிட்டதாக அன்னைக்கு ரஜினி பேசியது குறித்து அவருக்கு சம்மன் அளிக்க வேண்டும். இதை பற்றி நான் நீதிபதியிடம் வலியுறுத்த போகிறேன்" என்றார் சீமான்.

விசாரணை வளையம்
வழக்கமாகவே ரஜினி என்றாலே சூடாகும் சீமான், இந்த விஷயத்தை இவ்வளவு நாள் கழித்து கிண்டி உள்ளார். ஏற்கனவே துப்பாக்கி சூடு சம்பந்தமாக நடந்து வரும் தனிநபர் விசாரணை ஆணையத்தின் விசாரணை வளையத்துக்குள் ரஜினி கொண்டு வரப்படலாம் என்ற ஒரு தகவல் கசிந்தது.

நீதிபதி
இப்போது, சீமானின் கோரிக்கையும் ஏற்றுக் கொள்ளப்படுமானால், ரஜினிக்கும் சம்மன் அனுப்பப்படும் என தெரிகிறது. அப்படி அனுப்பப்பட்டால் அவரும் இந்த விசாரணை சம்பந்தமாக பதில் அளிக்க வரவேண்டி இருக்கும் என்பதாலும், சீமான் இதை அழுத்தமாக வலியுறுத்துவார் என்பதாலும் மேட்டர் மேலும் சூடாகும் என்றே தெரிகிறது.












Click it and Unblock the Notifications