“நா மட்டும் ஆட்சிக்கு வந்தா.. சிஎஸ்கே டீம்ல 11 வீரர்களும் தமிழர்கள்தான்!” சீமான் பேச்சு
தூத்துக்குடி: "சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தமிழர்கள் இல்லை என்ற வருத்தம் வேண்டாம். நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் 11 பேரும் தமிழர்கள்தான்" என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியிருப்பது, விவாதங்களை கிளப்பியுள்ளது.
2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்கள் யாரும் இடம்பெற்றிருக்காதது பெரும விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது. இந்த விவகாரம் தமிழக சட்டப் பேரவையிலும் எதிரொலித்தது. தருமபுரி சட்டமன்ற தொகுதி பாமக எம்எல்ஏ வெங்கடேஸ்வரன் இது குறிதது பேரவையில் பேசுகையில்,

"தமிழகத்தில் உள்ள இளைஞர்களை அதிக அளவில் ஈர்க்கும் ஐபிஎல் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் பங்கேற்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியில் தமிழக வீரர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவது இல்லை. எனவே, சிஎஸ்கே அணிக்கு தடை விதிக்க வேண்டும். தமிழகத்தில் திறமையான வீரர்கள் இருந்தும் சிஎஸ்கே அணியில் ஒருவரை கூட தேர்வு செய்யவில்லை. பிற மாநில வீரர்களுக்கே அணியில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
தமிழகம் சார்பில் ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் அணியாக சிஎஸ்கே அணி விளம்பரப்படுத்தப்பட்டு, பெரும் வர்த்தக லாபத்தை ஈட்டுகிறது. எனவே, தமிழக வீரர்கள் இல்லாத சிஎஸ்கே அணிக்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும்" என கூறியிருந்தார். இந்த சட்டமன்ற உரை பல மாதங்களுக்கு முன்னர் பேசப்பட்டிருந்தாலும், நீண்ட நாட்களுக்கு பின்னர் இது மீண்டும் விவாதமாக வெடித்திருக்கிறது. காரணம், சீமானின் பேச்சுதான்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நேற்று நாம் தமிழர் கட்சியின் சார்பில் முத்துக்குமார் 15வது ஆண்டு வீரவணக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்றிருந்த சீமான், "சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தமிழர்கள் இல்லை என்ற வருத்தம் வேண்டாம். நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் 11 பேரும் தமிழர்கள்தான்" என்று கூறியிருந்தார்.
அதாவது "மு.க.ஸ்டாலின் - உதயநிதி ஸ்டாலின் சொன்னதை நிறைவேற்றி விட்டார்களா? கூட்டுறவு வங்கியில் வைத்த நகைக் கடனை தள்ளுபடி செய்து விட்டார்களா? சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தமிழர்கள் இல்லை என்ற வருத்தம் வேண்டாம். நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் 11 பேரும் தமிழர்கள்தான். நாமும் சேர்ந்து விளையாடுவோம். 'மோடிக்கும், EDக்கும் அஞ்சமாட்டோம்' என்று கூறிய தந்தையும், மகனும் காலை பிடித்துக் கொண்டு இருக்கின்றனர்" என்று விமர்சித்திருந்தார். இந்த கூட்டத்தில் சிஎஸ்கே பற்றி சீமான் பேசியிருப்பது மீண்டும் விவாதங்களை கிளப்பியிருக்கிறது.












Click it and Unblock the Notifications